மும்பை : இந்திய அணியில் உலகக்கோப்பை தொடருக்கு பின் சில அதிரடி மாற்றங்கள் நடக்கக் கூடும் என பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது.
குறிப்பாக டெஸ்ட் அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும். டெஸ்ட் அணி கேப்டனாக இந்திய அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்படலாம் என ஒரு தகவல் கூறப்படுகிறது.
இந்த பேச்சு இப்போது அடிபடக் காரணமே, உலகக்கோப்பை தொடருக்கு பின் சில இந்திய வீரர்கள் ஓய்வு பெறுவார்கள் என்ற யூகம் தான். குறிப்பாக இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவுக்கு தற்போது 36 வயது ஆகிறது.

ரோஹித் சர்மா ஆடும் கடைசி உலகக்கோப்பை தொடர் இதுதான். இதன் பின் அவர் சில ஆண்டுகள் கிரிக்கெட் ஆடுவார். அதிகபட்சம் 38, 39 வயது வரை அவர் சர்வதேச போட்டிகளில் ஆடுவார். ஆனால், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடவே வாய்ப்பு அதிகம்.
வயது அதிகமான பின் டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராவதும், ஐந்து நாட்கள் தொடர்ந்து ஆடுவதும் கடினமான காரியமாக இருக்கும். அதனை ஒட்டி ரோஹித் சர்மா 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை முடிவுக்கு பின் டெஸ்ட் அணியில் இருந்து தனது ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது.
பின் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே ரோஹித் சர்மா தொடர்ந்து சில ஆண்டுகள் ஆடுவார் என எதிர்பார்க்கலாம். ஐபிஎல் தொடரிலும் பங்கேற்பார். இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக இடைவெளியே இல்லாமல் போட்டிகளில் ஆடி வருகிறது.
அதனால், டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றால் அவருக்கு சில மாதங்கள் வரை ஓய்வு கிடைக்கும். ஒரு ஆண்டில் இந்தியா இரண்டு அல்லது மூன்று டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கும். அது மட்டுமே சுமார் மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு மூத்த வீரரான விராட் கோலிக்கு தற்போது 34 வயதாகிறது. ஆனாலும், அவர் இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவார். ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளிலும் அவர் தொடர்ந்து இடம் பெறுவார். ஆனால், கோலி இனி கேப்டன் பதவிக்கு வருவது கடினம்.
அதை வைத்து பார்த்தால் உலகக்கோப்பை தொடருக்கு பின் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே கேப்டனாக தொடர வாய்ப்பு உள்ளது. டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டும்.
டெஸ்ட் அணியில் கேப்டன் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு உள்ள வீரர்கள் கே எல் ராகுல், பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோர் மட்டுமே. இவர்களில் ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியில் இன்னும் ஒரு நிலையான இடத்தை அடையவில்லை. கே எல் ராகுல் அல்லது பும்ரா இருவரில் யார் கேப்டனாக வருவார் என பார்த்தால் பும்ராவுக்கே வாய்ப்பு அதிகம்.
பும்ரா மீது இயல்பாகவே இந்திய வீரர்களுக்கு மட்டுமின்றி, மற்ற அணிகளுக்கும் மரியாதை உள்ளது. பும்ராவுக்கு டெஸ்ட் அணி கேப்டன் பதவி அழிப்பது, அவருக்கு அளிக்கும் கவுரவமாகவும் இருக்கும். கே எல் ராகுல் ஏற்கனவே, ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக இருக்கிறார். எனவே, அவருக்கு டெஸ்ட் கேப்டன் பொறுப்பு என்பது கூடுதல் சுமையாகவே இருக்கும்.
எனவே, ராகுல், ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக, ரோஹித் சர்மாவின் ஓய்வுக்கு பின் தொடரக் கூடும். ஆனால், டெஸ்ட் அணிக்கு பும்ரா கேப்டனாகவே வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.