பெங்களூரு: கடந்த 10 ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் மும்பை விளையாடிய முதல் போட்டியில் ஒன்றில் கூட வென்றதில்லை. இந்த மோசமான சாதனையை பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வென்று ரோகித் சர்மா வரலாற்றை மாற்றிக் காட்டுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
16வது ஐபிஎல் தொடரின் மூன்றாம் நாளான இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்க உள்ள போட்டியில் டூ பிளெசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் விளையாடுகிறது.
கடந்த சீசனில் 4வது இடத்தில் முடித்த பெங்களூரு அணி நடப்பு ஆண்டிலாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்கியுள்ளனர்.

ஆர்சிபி நிர்வாகம் விராட் கோலி, டூ பிளெசிஸ், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், ஃபின் ஆலன், சிராஜ், ஹர்ஷல் பட்டேல், ஷபாஸ் அகமது, பிரேஸ்வெல் மற்றும் டேவிட் வில்லி என்று தரமான வீரர்களை கொண்டு அணி கட்டமைத்துள்ளது. அந்த அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக இருக்கிறது.
ஹேசில்வுட் மற்றும் ரஜத் படிதார் ஆகியோர் காயம் காரணமாக முதல் கட்ட ஆட்டங்களில் ஆடமுடியாதது அந்த அணிக்கு ஒரு பின்னடைவாக உள்ளது. இருப்பினும் நீண்ட ஆண்டுகளுக்கு சொந்த மண்ணில் விளையாடுவதால், ஆர்சிபி அணியும் விராட் கோலியும் முழுமையான திறனை வெளிப்படுத்த தயாராக உள்ளனர். இதனால் நடப்பாண்டில் ஈ சாவா கப் நம்தே என்று நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
மறுபக்கம் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த முறை கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. அப்போது 8 போட்டிகளுக்கு பின்னரே முதல் வெற்றியையே பெற்றது. மும்பை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து இருப்பதால் இந்த சீசனில் முழுவதுமாக விளையாடமாட்டார்.

வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் திரும்பி இருந்தாலும் பும்ராவால் ஏற்பட்டு இருக்கும் மிகப்பெரிய வெற்றிடத்தை அந்த அணி எப்படி நிரப்பப்போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஆர்ச்சரால் ஏற்பட்ட வெற்றிடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்பதே மும்பை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ரூ.17.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கேமரூன் கிரீன், ரோகித் சர்மா, அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், டிம் டேவிட், திலக் வர்மா ஆகியோர் இருந்தாலும், அனைவரும் ஃபார்மில் இருக்கிறார்களா என்பது முதல் போட்டிக்கு பின்னரே தெரிய வரும். அதேபோல் கார்த்திகேயா மற்றும் ஹிருத்திக் ஷோகீன் ஆகிய இளைஞர்களை மட்டுமே சுழற்பந்துவீச்சில் நம்பி இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் மும்பை அணி கடந்த 10 ஆண்டுகளாக தனது முதல் லீக் போட்டியில் வெற்றிபெற்றதே இல்லை. 10 ஆண்டுகளில் மும்பை அணி விளையாடிய அனைத்து முதல் போட்டிகளில் தோல்வியையே சந்தித்துள்ளது. கடைசியாக 2012ல் தான் முதல் போட்டியில் வென்றுள்ளது. அந்த மோசமான சாதனையை மாற்றி போட்டியை வெற்றியுடன் ஆரம்பிக்க மும்பை அணி எல்லா வகையிலும் முனைப்பு காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பழைய சரித்திரத்தை ரோகித் சர்மா மாற்றிக் காட்டுவாரா என்பதே கேள்வியாக உள்ளது. இந்த இரு அணிகள் இதுவரை நேருக்கு நேர் விளையாடியுள்ள 30 போட்டிகளில் 17ல் மும்பையும், 13ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. பெங்களூரு சின்னசாமி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதோடு, அளவில் சிறியது என்பதால் நிச்சயம் ஹை ஸ்கோரிங் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.