இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த 11 வீரர்கள் அடங்கிய அணியை தேர்வு செய்துள்ளார். அதில் பும்ராவுக்கு இடம் அளிக்காதது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றதை அடுத்து, உலகின் சிறந்த ஒருநாள் அணியாக பாராட்டுகளை பெற்று வருகிறது. ஏழு ஐசிசி கோப்பைகளை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளில் மட்டும் இந்தியா ஐந்து கோப்பைகளை வென்றுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் சிறந்த 11 வீரர்கள் அடங்கிய அணியை சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார்.

அந்த அணிக்கு கேப்டனாக எம்.எஸ். தோனி நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித்துக்கு கேப்டன் பதவி அளிக்கப்படவில்லை. துவக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் சர்மாவை கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். அவர்கள் இருவரும் ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரர்களாக முத்திரை பதித்தவர்கள். மேலும், 10,000 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை எடுத்த வீரர்கள். சச்சின் டெண்டுல்கரின் பல ஒருநாள் சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படாமல் உள்ளன.
அடுத்து மூன்றாம் வரிசையில் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஒருநாள் போட்டிகளில் "சேஸ் மாஸ்டர்" என அழைக்கப்படுகிறார். ஒருநாள் போட்டிகளில் 14,000க்கும் அதிகமான ரன்கள் சேர்த்து இருக்கிறார். அடுத்த நான்காம் வரிசையில் மொஹிந்தர் அமர்நாத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் ஆல்ரவுண்டர் ஆவார். 1983 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வெற்றியில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் அவர் ஆட்டநாயகன் விருது பெற்றவர்.
ஐந்தாம் வரிசையில் யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரும் ஆல்ரவுண்டர் ஆவார். 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரில் ஆட்டநாயகன் விருதை யுவராஜ் சிங் வென்றிருந்தார். ஆறாம் வரிசையில் மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஏழாம் வரிசையில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கபில் தேவ், எட்டாம் வரிசையில் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அடுத்ததாக அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது ஷமி மற்றும் ஜாகீர் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அணியில் பும்ரா தேர்வு செய்யப்படவில்லை. முகமது ஷமியை விட பும்ரா குறைவான ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்பதால் தேர்வு செய்யப்படவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, தற்போது சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த நான்கு வீரர்களுக்கு சுனில் கவாஸ்கர் தனது சிறந்த ஒருநாள் அணியில் இடம் அளித்துள்ளார்.
கேப்டன் ரோஹித் சர்மா, மூத்த வீரர் விராட் கோலி, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆகிய நான்கு வீரர்களுக்கு அவர் இடம் அளித்துள்ளார். அதேபோல, 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வென்ற சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், தோனி, ஹர்பஜன் சிங் மற்றும் ஜாகீர் கான் ஆகியோருக்கும் இடம் அளித்துள்ளார். 1983 உலகக் கோப்பை வென்ற மொஹிந்தர் அமர்நாத் மற்றும் கபில் தேவ் ஆகியோருக்கும் இடம் அளித்துள்ளார்.
சுனில் கவாஸ்கர் தேர்வு செய்த ஆல்-டைம் ஒருநாள் போட்டி இந்திய அணி: சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, விராட் கோலி, மொஹிந்தர் அமர்நாத், யுவராஜ் சிங், தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), கபில் தேவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், முகமது ஷமி, ஜாகீர் கான்.