மும்பை: இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் தனது விக்கெட்டை ஒரு முறை வீழ்த்தி இருப்பதாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். அதேபோல் வான்கடே மைதானத்திற்கு பின், சேப்பாக்கம் மைதானமே மிகவும் பிடித்த மைதானம் என்றும் சச்சின் கூறியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அணிகளும் ஒரு சில வெற்றி, தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். இதனால் வரும் நாட்களில் புள்ளிப்பட்டியல் தலைகீழாக கூட மாறும் சூழல் உள்ளது. குறிப்பாக மும்பை அணி முதல் இரு போட்டிகளில் அடைந்த தோல்வியில் இருந்து அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளது.

இதற்கு மும்பை அணியின் விடா முயற்சியும் இளம் வீரர்களின் எழுச்சியுமே காரணமாக பார்க்கப்படுகிறது. திலக் வர்மா, கேமரூன் க்ரீன், அர்ஜுன் டெண்டுல்கர், ஹிர்த்திக் ஷோக்கின் ஆகியோர் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மும்பை அணியின் ஆலோசகரும், முன்னாள் வீரருமான சச்சின் டெண்டுல்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் #AskSachin என்ற ஹேஷ்டாக் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதில் ரசிகர் ஒருவர் எப்போதாவது அர்ஜுன் டெண்டுல்கர் உங்கள் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறாரா? என்று வந்த கேள்விக்கு சச்சின் டெண்டுல்கர் பதில் அளித்துள்ளார். அதில், ஆம்.. ஒருமுறை அர்ஜுன் டெண்டுல்கர் என் விக்கெட்டை லார்ட்ஸ் மைதானத்தில் வீழ்த்தி இருக்கிறார். ஆனால் இப்போது அர்ஜுன் பற்றி பேச வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் சொந்த மண்ணான மும்பை வான்கடே மைதானத்திற்கு பின் மிகவும் பிடித்த மைதானம் என்று ரசிகர்கள் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, சென்னை சேப்பாக்கம் மைதானமே மிகவும் பிடித்த மைதானம் என்று சச்சின் டெண்டுல்கர் பதிலளித்துள்ளார். அதேபோல் எப்போதும் என் சொந்த வீடு போன்ற உணர்வை கொடுப்பது மும்பை நகரம் தான் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல் மிகவும் பிடித்த கால்பந்து வீரர் யார் என்ற கேள்விக்கு, மெஸ்ஸியின் பெயரை சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். அதேபோல் மிகவும் பிடித்த உணவு எது? என்ற கேள்விக்கு, பிரியாணியை தேர்வு செய்துள்ளார். அதேபோல் வீட்டில் யாருடைய ஆட்சி நடக்கும் என்ற கேள்விக்கு, வழக்கம் போல் தனது மனைவியான அஞ்சலியின் பெயரை சச்சின் குறிப்பிட்டுள்ளார்.