மும்பை : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் உள்ள அனைத்து பேட்ஸ்மேன்களின் சராசரியும் கடுமையாக சரிந்துள்ளது. இதற்கு காரணம் இந்தியாவில் தற்போது எல்லாம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட்டிருப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது.
பேட்ஸ்மேன்களால் முன்பு போல் ரன் குவிக்க முடியவில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இந்திய அணியின் நடுவரிசை வீரர்களின் சராசரி 50 க்கு மேல் இருக்கும்.

ஆனால் தற்போது அது அனைவரின் சராசரி 40க்கு கீழ் வந்துவிட்டது. கடந்த ஆண்டு இந்திய அணியிலிருந்து ரஹானே அதிரடியாக நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ஐபிஎல்லில் தன்னுடைய திறமையை நிரூபித்து இந்திய அணிக்கு திரும்பினார்.
தற்போது புஜாரா அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இத்தனைக்கும் அவர் கவுன்டி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியிருந்தார். ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் அவர் சொதப்பியதால் இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் அணியில் புஜாரா நீக்கப்பட்ட அதே நாளில் தனது மகன் தீவிர பயிற்சியில் ஈடுபடத் தொடங்கி விட்டதாக அவருடைய தந்தை அரவிந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் புஜாரா மனதளவில் பலமான வீரர். அவரை சுலபமாக எல்லாம் அசைத்து விட முடியாது. இந்திய அணியில் வீரர்கள் தேர்வு குறித்து என்னால் எந்த கருத்தும் சொல்ல முடியாது. ஆனால் நான் பார்த்த வரைக்கும் அணி அறிவிக்கப்பட்ட அதே நாளில் எனது மகன் புஜாரா பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடினமாக அவர் வலைப்பயிற்சி செய்து வருகிறார்.
துலீப் கோப்பை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. அதற்காக அவர் தயாராகி வருகிறார். மேலும் கவுண்டி கிரிக்கெட்டிலும் புஜாராவுக்கு என தனி பெயர் இருக்கிறது. அங்கேயும் சென்று அவர் விளையாடுவார். ஒரு தந்தையாகவும் ஒரு பயிற்சியாளராகவும் இதை நான் சொல்கிறேன். புஜாரா மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடியாது என்று எல்லாம் நான் நம்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
2012 மற்றும் 13ஆம் ஆண்டு டிராவிட், லக்ஷ்மன்,சேவாக், சச்சின் ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர். இதனால் இந்திய டெஸ்ட் அணி கொஞ்சம் தடுமாறியது. அதேபோல் ஒரு நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக சீனியர் ஒவ்வொருவராக அணியிலிருந்து நீக்கப்படுகிறார்கள் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.