ஐபிஎல்லில் சிக்கல்
கொரோனாவால் கடந்த ஆண்டில் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாமல் போனது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவின் 6 இடங்களில் ஐபிஎல் 2021 தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. ஆயினும் கொரோனாவால் வீரர்கள், ஊழியர்கள் என அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வரும்நிலையில் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி முறையாக நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதித்த ராணா
கேகேஆர் அணியின் பேட்ஸ்மேன் நிதிஷ் ராணா அந்த அணியின் பயோ பபுளில் இருந்தபோது வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு அவர் 12 நாட்களுக்கு பிறகு அணியின் பயோ பபுளில் மீண்டும் இணைந்துள்ளார். கடந்த 4 சீசன்களில் அந்த அணிக்காக விளையாடி 300க்கும் மேற்பட்ட ரன்களை ஒவ்வொரு தொடரிலும் எடுத்துள்ளார்.
கொரோனாவால் அவதி
அடுத்தததாக ஆர்சிபியின் தேவ்தத் படிக்கல்லுக்கு கடந்த மார்ச் 22ம் தேதி கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு தற்போது அவர் மீண்டும் அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார். இதேபோல ஆர்சிபியின் டேனியல் சாம்சிற்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுளள்து.
முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார்
கடந்த மார்ச் 28ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியின் அக்சர் படேலுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது, அவர் அணியின் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கவுட் கிரண் மோரேவிற்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
11 பேருக்கு கொரோனா
கடந்த வாரத்தில் மும்பை வான்கடே மைதான ஊழியர்கள் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் அனைவருக்கும் மைதானத்திலேயே தனியிடம் ஒதுக்கித்தரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆயினும் அங்கு மேலும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
14 பேருக்கு கொரோனா
இதேபோல கடந்த 5ம் தேதி ஒளிபரப்பு குழுவின் 14 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்டது. இந்த குழுவில் இயக்குநர்கள் இவிஎஸ் ஆபரேட்டர்கள், ப்ரொட்யூசர்கள், கேமராமேன் மற்றும் வீடியோ எடிட்டர்கள் ஆகியோர் அடக்கம். இவ்வாறு ஐபிஎல் சீசன் துவங்குவதற்கு முன்னதாகவே கொரோனா சீசனை எதிர்கொண்டுள்ளது ஐபிஎல் குழு.