சென்னை: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி துவக்க விழாவில் இந்தி நடிகர்களின் கலை நிகழ்ச்சி ஆபாசமாக இருந்ததாகவும், நடவடிக்கை கோரியும் தாக்கலான வழக்கை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை வக்கீல் ஜெபக்குமார் தாக்கல் செய்த மனு: சென்னையில் 2012 ஏப்ரல் 3ல் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி துவக்க விழா கலை நிகழ்ச்சி நடந்தது. நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான்கான், கரினாகபூர், பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாப் பாடகி கேத்திபெரி, கிரிக்கெட் வீரர் டக்ளஸ் போலிஞ்சர் பங்கேற்றனர். இது ஆபாசமாக, பாலுணர்வை துாண்டுவதாக இருந்தது.

சம்பந்தப்பட்டோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி., மற்றும் தென்மண்டல ஐ.ஜி.,யிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மனுவை ஏ.டி.ஜி.பி., விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், நடவடிக்கை இல்லை. எனவே வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. பி.சி.சி.ஐ., மற்றும் நடிகர்கள் சார்பில், 'குற்றச்சாட்டு தவறானது,' என வலியுறுத்தப்பட்டது. நீதிபதி," ஏற்கனவே சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மனு 2012 ல் தாக்கல் செய்யப்பட்டது. இது நிலைக்கத்தக்கதல்ல. மனு காலாவதியாகிவிட்டது. தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.