ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் முதல் போட்டியில் யுவராஜ் சிங் 27 பந்துகளில் 62 ரன்களை குவித்து பட்டையை கிளப்பினார். அவரது அதிரடி ஆட்டம் இன்றும் தொடருமான என ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
10வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 5ஆம் தேதி ஹைதராபாத்தில் கோலாகலமாக தொடங்கின. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.

இதில் முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 207 ரன்கள் குவித்தது. 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு களமிறங்கிய பெங்களூளரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
சன்ரைசர்ஸ் அணியின் நான்காவது வீரராக களமிறங்கிய யுவராஜ் சிங் எதிரணியின் பந்துகளை பறக்கவிட்டார். அவர், 27 பந்துகளில் 62 ரன்களை குவித்து அணியின் ரன் ரேட்டை எகிற வைத்தார்.
இதில் 7 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். 27 பந்துகளில் 62 ரன்களை குவித்த அயுவராஜ் சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் லயன்ஸை எதிர்கொள்கிறது.
ஏற்கனவே முதல் வெற்றியை பதிவு செய்துள்ள, ஹைதராபாத் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் முழு தெம்புடன் களமிறங்கும். முதல் போட்டியில் ரன் மழை பொழிந்த அந்த அணியின் வீரர் யுவராஜ் சிங் இன்றும் அதிரடி காட்டி ரசிகர்களை மகிழ்விப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.