ராஜ்காட் : இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பது என்பது சவாலான காரியம். திறமை மட்டும் இருந்தால் போதாது. அதிர்ஷ்டம், தேர்வு குழுவின் தயவு, ரசிகர்களின் ஆதரவு என அனைத்தும் இருக்க வேண்டும்.
இதனால் பல வீரர்கள் திறமை இருந்தும் ஒரு போட்டியில் கூட பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் செல்டன் ஜாக்சன் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு முறை கூட இந்திய அணிக்காக விளையாடவில்லை.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டெஸ்ட் போட்டியில் செல்டன் ஜாக்சன் இடம்பெறவில்லை. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர் 90 போட்டிகளுக்கு மேல் ரஞ்சியில் விளையாடி பல சதங்களை குவித்தாலும் இவருடைய பெயர் பரிசளிக்கப்படவே இல்லை.
இந்திய ஏ அணிக்கு கூட ஜாக்சன் பெயர் சேர்க்கப்படவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நம்பிக்கையுடன் காத்திருக்கவும் இந்திய அணிக்காக விளையாடுவோம் என்ற கனவு காணவும் எனக்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது. நான் தொடர்ந்து மூன்று சீசன்களில் சிறப்பாக விளையாடினால் எனக்கு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். வயது இதற்கு காரணம் கிடையாது.
நான் சிறந்த வீரர் தான். ஆனால் எனக்கு வயதாகிவிட்டது என்று பலரும் கூறுவதை கேட்கும் போது. எனக்கே சோர்வாக மாறிவிட்டது. எனக்கு 35 வயது தான் ஆகிவிட்டது. 75 ஆகவில்லை. தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரை பார்க்கும்போது எனக்குள்ளே உற்சாகம் கிடைக்கிறது. தினேஷ் கார்த்திக் உடன் நான் கேகேஆர் அணிக்காக விளையாடினேன். அப்போது அவர் எப்படி தன் கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றி மீண்டும் இந்திய அணிக்குள் வந்தார் என்பதை பார்க்கும்போது எனக்கு நிச்சயம் ஊக்கத்தை கொடுக்கிறது.
வாய்ப்பே கொடுக்காத போது எப்படி உங்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். நான் இதுவரை தேர்வு குழுவின் செயல்பாடு குறித்து எந்த கருத்தும் கூறியது கிடையாது. யாராவது நீ ஏன் இன்னும் தேர்வுக்குழுவில் இடம்பெறவில்லை என்று கேட்டால் நான் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு ஒருமுறை கூட போன் செய்து பேசியதில்லை. அதுதான் காரணம் என்று நான் கூறுவேன். நான் கிரிக்கெட்டுக்கு சரிவர மாட்டேன் என்று நீங்கள் எண்ணினால்,90க்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடி இருக்க முடியாது. என்னுடைய சராசரியும் 50 க்கு அருகில் வந்திருக்காது என்று ஜாக்சன் கூறியுள்ளார்.