சென்னை: சென்னை அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் மும்பை அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் களமிறங்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து மும்பை அணி விளையாட உள்ளது. "எல் கிளாசிக்கோ" ஆட்டம் என்பதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஆட்டங்களில், மும்பை அணியே அதிக வெற்றிகளை பெற்றுள்ளது.

இதனால் இன்றையப் போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்று சாதிக்குமா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பேட்டிங் பலமாக இருந்தாலும், பந்துவீச்சில் இன்னும் முழுமையான ஃபார்முக்கு வரவில்லை. குறிப்பாக காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள தீபக் சஹர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் சொதப்பி வருகிறார்கள்.
குறிப்பாக துஷார் தேஷ்பாண்டே அதிக ரன்களை விட்டுக் கொடுத்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுப்பதே சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால் பவர்பிளே ஓவர்களில் தீபக் சஹருக்கு உதவியாக பென் ஸ்டோக்ஸை பந்துவீச வைக்க வேண்டும் என்று பலரும் பேசி வந்தனர்.

இந்த நிலையில் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ள பென் ஸ்டோக்ஸ், இன்றையப் போட்டியில் களமிறங்க தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் தீக்சனா, பதிரானா, கான்வே, மொயின் அலி ஆகியோரில் யாரை பெஞ்சில் அமர வைப்பது என்பதில் முடிவு எடுக்க முடியாமல் சென்னை அணி திணறி வருகிறது.
ஏற்கனவே சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் சான்ட்னரை அணியில் சேர்க்க முடியாத நிலையில் உள்ளது. தற்போது பென் ஸ்டோக்ஸும் தயாராகி இருப்பதால், இன்றையப் போட்டியில் சென்னை அணியில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மும்பை அணிக்கு எதிரான பென் ஸ்டோக்ஸ் எப்போதும் சிறப்பாக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.