சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதலில் பவுலிங் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜிக்கு தொற்று உறுதியான நிலையில் அடுத்ததாக பேட்டிங் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரருமான மைக் ஹசிக்கும் பரவியது. இதனையடுத்து அவர் டெல்லியில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
குட் நியூஸ்
இந்நிலையில் அவர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்துள்ளார். அவருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டீவ் என முடிவு வந்துள்ளது. மேலும் அவர் தாய் நாட்டிற்கு செல்லலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவரை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
மாலத்தீவில் தஞ்சம்
இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு வரும் மே 15ம் தேதி வரை தடைவிதித்துள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த ஆஸ்திரேலியர்கள் 37 பேர் மாலத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒருவேளை ஆஸ்திரேலிய அரசின் அனுமதி கிடைத்துவிட்டால் அவர்களை வரும் மே 16ம் தேதி அங்கிருந்து தனி விமானம் மூலம் அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனால் மைக் ஹசியும் மாலத்தீவுக்கு சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்வார் என திட்டம் போடப்பட்டது.
அடைக்கப்பட்ட கதவுகள்
ஆனால் கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து வருபவர்கள் மாலத்தீவுக்குள் நுழைய அந்த அரசு தடைவிதித்துள்ளது. இதனால் மைக் ஹசி குணமடைந்த பின்னரும் அவர் மாலத்தீவுக்கு செல்ல முடியாது. மேலும் ஒருவேளை இந்தியாவில் இருந்து செல்லும் விமானங்களுக்கு ஆஸ்திரேலியாவில் தடை நீடிக்கப்பட்டால் மைக் ஹசி சென்னையிலேயே தங்க வேண்டியது தான். இதுகுறித்து பேசியுள்ள அந்த அணியின் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், மைக் ஹசி தற்போது தான் குணமடைந்துள்ளார். அவரை எப்போது வீட்டிற்கு அனுப்புவது, எங்கிருந்து ( மாலத்தீவு or ஆஸ்திரேலியா) அனுப்புவது என முடிவு எடுக்கப்படவில்லை எனக்கூறியுள்ளார்.