ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் நாளை ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் மும்பைக்கு எதிரான போட்டியை தாம் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக சிஎஸ்கே வீரர் மோயின் அலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் கொண்ட அணி என்றால் அது சிஎஸ்கே மற்றும் மும்பை தான். இதனால் நாளைய ஆட்டம் அதிக ரசிகர்கள் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மெகா ஏலத்திற்கு பிறகு இரு அணிகளும் தங்களுடைய முக்கிய வீரர்களை இழந்ததால் தடுமாறுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சிஎஸ்கே வீரர் மோயின் அலி சென்னை, மும்பை இரண்டுமே வெற்றிகரமான அணிகளாக விளங்கி வருகிறது. எங்கள் இரண்டு அணிகளுக்கும் அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். சர்வதேச கிரிக்கெட்டுக்கு வெளியே இவ்விரண்டு அணிகள் மோதும் ஆட்டம் தான் மிகப்பெரியதாக பார்க்கப்படுகிறது.
இதனை கால்பந்து பாணியில் சொல்ல வேண்டும் என்றால் மான்செஸ்டர் யுனைடெட் ,லிவர்புல் அணியை எதிர்கொள்வது போல் கருதலாம். எனவே இது மிகப்பெரிய போட்டி ஆகும். தீபக்சாகர் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை. காரணம் அவர் காயத்திலிருந்து குணமடைந்து தற்போது தான் கிரிக்கெட் விளையாடுகிறார்.இதுபோன்ற போட்டிகளில் விளையாடும் போது தான் தீபக்சாகரின் பந்துவீச்சு மேம்பட வாய்ப்பு இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் தீபச்சாகர் அதிக போட்டிகளில் விளையாட தன்னுடைய ஃபார்மை அவர் நிச்சயம் மீட்பார். தீபக்சாகர் எங்களுடைய மிகப்பெரிய பந்துவீச்சாளர். ஏனென்றால் பவர் பிளேவில் எங்களுக்கு மூன்று, நான்கு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்கும் திறமை இருக்கிறது என பாராட்டியுள்ளார். கடைசியாக நடைபெற்ற ஆறு போட்டிகளில் மும்பை அணி மூன்று முறையும் சென்னை அணி மூன்று முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.