ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விளையாட இந்திய அணி வீரர்கள் ட்ரினிடாட் சென்றபோது, சிஎஸ்கே பயிற்சியாளர் டுவைன் பிராவோ தனது மகனுடன் அனைவரையும் வரவேற்ற சம்பவம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் கால் வைத்த நாள் முதலே, திருவிழா போல் அந்நாட்டு ரசிகர்கள் இந்திய அணி வீரர்களை கொண்டாடி வருகிறார்கள். விராட் கோலி சந்தித்த கேரி சோபர்ஸ், கேரி சோபர்ஸிடம் சுப்மன் கில்லை அறிமுகம் செய்த ராகுல் டிராவிட், விவியன் ரிச்சர்ட்ஸ் - விராட் கோலி சந்திப்பு, ஜோஷ்வா சில்வாவின் தாயை சந்தித்த விராட் கோலி, விராட் கோலி சிறிய குழந்தை பிரேஸ்லெட்டை பரிசாக கொடுத்தது என்று அன்பை பொழிந்து வருகிறார்கள்.

இதுமட்டுமல்லாமல் பிரையம் லாரா உடனான சந்திப்பு, ட்ரினிடாட் மக்கள் விராட் கோலியை கொண்டாடியது என்று இந்திய ரசிகர்களே வியக்கும் அளவிற்கு இந்திய வீரர்களை அந்நாட்டு மக்களும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் எதிர்பாராத சிஎஸ்கே ரீ-யூனியன் நடந்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் பார்படாஸில் இருந்து ட்ரினிடாட் வந்து சேர்ந்தனர். இதனையறிந்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் டுவைன் பிராவோ, இந்திய வீரர்களை வரவேற்பதற்காக தனது மகனுடன் வந்து காத்திருந்தார். இந்திய வீரர்கள் வந்தபின் வாசலிலேயே நின்று வரவேற்ற பிராவோவுடன் அனைத்து வீரர்களும் சில நிமிடங்கள் நின்று பேசி அன்பை பரிமாறினர்.

அதேபோல் ரோகித் சர்மா ஹோட்டலில் இருந்து வெளியே வந்து பிராவோவுடனும், அவரின் மகனுடன் சில நிமிடங்கள் செலவிட்டார். பின்னர் சிஎஸ்கே அணியில் பயிற்சியாளரான பிராவோவை சிஎஸ்கே வீரர்களும் சந்தித்தனர். ஜடேஜா சில நிமிடங்கள் பேசிச் சென்ற நிலையில், இளம் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பிராவோ உடன் நீண்ட நேரம் செலவிட்டுள்ளார். இதையடுத்து பிராவோ இந்திய வீரர்கள் அனைவருக்கும் டின்னருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.