நகரங்களை வைத்து ஐபிஎல் அணிகள்
ஐபிஎல் அணிகள் 2008இல் துவங்கப்பட்ட போது எட்டு நகரங்களை மையமாக வைத்து அணிகள் உருவாக்கப்பட்டன. குறிப்பிட்ட பெருநகரத்தில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் அந்த நகரத்தை மையமாக வைத்து செயல்படும் ஐபிஎல் அணிக்கு ஆதரவு தரும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
பிடித்த வீரர்கள்
ஆனால், காலப்போக்கில் தங்களுக்கு பிடித்த வீரர்கள் எந்த ஐபிஎல் அணியில் இருக்கிறார்களோ அந்த அணிகளை ரசிகர்கள் ஆதரிக்க துவங்கினார்கள். சென்னையை மையமாக வைத்து செயல்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதலில் சென்னை மற்றும் தமிழ்நாட்டில் தான் ஆதரவு அதிகமாக இருந்தது.
ரசிகர் வட்டம்
தோனி அணியை சிறப்பாக வழி நடத்தியதால் சிஎஸ்கே அணிக்கு ரசிகர் வட்டம் அதிகரித்தது. தனிப்பட்ட முறையில் தோனிக்கு 2008இல் இருந்ததை விட வருடா வருடம் ரசிகர் கூட்டம் அதிகரித்து வந்தது. அதற்கு சிஎஸ்கே அணியும் ஒரு வகையில் காரணம்.
சிஎஸ்கே அணியின் ரசிகர்கள்
தற்போது சிஎஸ்கே - தோனி ரசிகர்கள் இல்லாத மாநிலமே இல்லை எனும் அளவுக்கு இந்தியா முழுவதும் சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் உள்ளனர். அதற்கு அடுத்து அதிக ரசிகர் கூட்டம் கொண்ட அணி மும்பை இந்தியன்ஸ். அதற்கு முக்கிய காரணம் அந்த அணி நான்கு முறை ஐபிஎல் கோப்பை வென்றது தான்.
முக்கிய வீரர்களின் ரசிகர்கள்
அது மட்டுமின்றி, சச்சின் ரசிகர்கள், ரோஹித் சர்மா ரசிகர்கள் என முக்கிய வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து இருப்பதும் ஒரு காரணம். அந்த அணிக்கு கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் மும்பை ரசிகர்கள்
தமிழ்நாட்டிலும் மும்பை அணிக்கு ரசிகர்கள் உள்ளனர். ஆனால், அது இந்த ஆண்டு பெரிதாக வளர்ந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி குறி வைத்து தமிழ்நாட்டில் ரசிகர் கூட்டத்தை அதிகரித்து வருவதாகவே தோன்றுகிறது. இணையத்தில் அந்த அணி ரசிகர்கள் சிஎஸ்கேவை கிண்டல் செய்து அதிக அளவில் ட்ரென்டிங் செய்து வருவதே அந்த சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
சிஎஸ்கேவை கிண்டல் செய்த மும்பை ரசிகர்கள்
சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டி துவங்க இரண்டு நாட்கள் இருக்கும் போதே ட்விட்டரில் சிஎஸ்கே அணியை கிண்டல் செய்து மீம்ஸ், பதிவுகளை பகிர்ந்தனர் தமிழக மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள். அதற்கு மறுநாளே, மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்
க்ளோசப்பில் வைத்து பதில்
அந்த வீடியோவில் தமிழக ரசிகர் ஒருவரின் கேள்வியை தேர்வு செய்து அவர் பதில் கூறி உள்ளார். அதில் ஒரு இடத்தில் ரோஹித் சர்மாவை க்ளோசப்பில் வைத்து தமிழக ரசிகர்களை பற்றி அவர் பேசுவதை ஹைலைட் செய்து காட்டி உள்ளனர்.
தமிழக ரசிகர்களுக்கு குறி
அதில் ரோஹித் சர்மா, தமிழ்நாட்டில் ரசிகர் கூட்டம் இருப்பது சிறப்பான விஷயம். உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகப் பெரிது என கூறி உள்ளார். இந்த வீடியோ தமிழக ரசிகர்களை குறிப்பிட்டே வெளியிடப்பட்டதாக தெரிகிறது. ஆக மொத்தத்தில் சிஎஸ்கே அணியின் அஸ்திவாரமான தமிழக ரசிகர்களை குறி வைத்து இறங்கி உள்ளது மும்பை இந்தியன்ஸ்.