டோணி வேறு அணியில் விளையாடுவதை தடுக்க மாட்டோம்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
சென்னை: ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக கேப்டன் டோணியை ஓரிருநாட்களில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் ஐ.பி.எல். போட்டிகளில் வேறு அணிகளில் டோணி விளையாடுவதை தடுக்கவும் மாட்டோம் எனவும் சென்னை அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிக்ஸிங் விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். போட்டிகளில் 2 ஆண்டுகாலம் விளையாட தடை விதித்தது நீதிபதி லோதா கமிட்டி. இது கிரிக்கெட் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

டோணியுடன் ஆலோசனை
இந்நிலையில் தற்போதைய நிலைமை குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கேப்டன் டோணியை தொடர்பு கொண்டு பேசிவருகிறது. சென்னை அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் டோணிதான் முதுகெலும்பு.

வேறு அணியில் டோணி?
தற்போது சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அடுத்த 2 தொடர்களிலும் டோணி விளையாடாமல் ஒதுங்கி இருப்பாரா? அல்லது வேறு அணியில் விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் டோணியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தவும் சென்னை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தடுக்க மாட்டோம்
அனேகமாக ஓரிருநாட்களில் டோணியை நேரில் சந்தித்து இது குறித்து ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் டோணி எந்த முடிவையும் எடுக்கலாம்; அவருக்கு நெருக்கடி எதுவும் கொடுக்கமாட்டோம் என்றும் சென்னை அணி நிர்வாகம் கூறிவருகிறது.

சட்ட ஆலோசனை
இந்த நிலையில்தான் சென்னை அணி நிர்வாகம் நேற்று சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனைகளை நடத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications