9ம் தேதி துவக்கம்
ஐபிஎல் 2021 தொடர் கடந்த 9ம் தேதி முதல் துவங்கி தொடர்ச்சியான போட்டிகளை ரசிகர்களுக்கு அளித்து வருகிறது நேற்றைய 6வது போட்டி சென்னையில் நடைபெற்ற நிலையில், அதில் எஸ்ஆர்எச் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. பரபரப்பான இந்த போடடியில் ஆர்சிபி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வார்னர் அரைசதம்
இந்த போட்டியில் ஆர்சிபியின் 150 ரன்கள் என்ற இலக்கை கொண்டு சிறப்பாக ஆடியது எஸ்ஆர்எச். அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 37 பந்துகளில் 54 ரன்களை அடித்திருந்தார். ஆயினும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. ஆர்சிபியின் சிறப்பான பௌலிங்கிற்கு முன்னால் எஸ்ஆர்எச் தோற்று ஓடியது.
டேவிட் வார்னர் சாதனை
ஆனால் அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் நேற்றைய போட்டியின்மூலம் ஐபிஎல்லில் சிறப்பான சாதனையை செய்துள்ளார். ஐபிஎல்லில் அதிக ரன்களை அடித்த 3வது வீரர் என்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
ரோகித்தை பின்னுக்கு தள்ளி சாதனை
ஏற்கனவே 5,257 ரன்களுடன் ரோகித் சர்மாவிற்கு பின்னே இருந்த டேவிட் வார்னர், நேற்றைய போட்டியில் அடித்த 54 ரன்கள் மூலம் 5,311 ரன்களுடன் ரோகித் சர்மாவை முந்தியுள்ளார். 144 போட்டிகளில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார். தொடர் துவங்குவதற்கு முன்னதாக ரோகித் சர்மாவை முந்த அவருக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
அரைசதம் அடித்து முன்னேற்றம்
ஆனால் கடந்த போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா அரைசதம் அடித்த நிலையில், மீண்டும் அவர் 3வது இடத்திற்கு முந்தினார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக டேவிட் வார்னர் அடித்த அரைசதம் அவரை மீண்டும் 3வது இடத்திற்கு முன்னேற செய்துள்ளது.
விராட் கோலி முதல் வீரர்
ஐபிஎல்லில் அதிக ரன்களை எடுத்துள்ள வீரர் என்ற பெருமை ஆர்சிபி கேப்டன் விராட் கோலிக்கு உள்ளது. 194 போட்டிகளில் விளையாடி 5,944 ரன்களுடன் அவர் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 193 போட்டிகளில் 5,368 ரன்களுடன் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளார்.