
சமூக தளங்களில் வைரல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சாஹர், தனது காதலிக்கு மோதிரம் அணிவித்து, காதலை வெளிப்படுத்தினார். அப்போது தோனியின் மனைவி சாக்ஷி, ரெய்னாவின் மனைவி ப்ரியங்கா மற்றும் உடனிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சாஹர் தனது காதலிக்கு மோதிரம் அணிவிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தீபக் சாஹருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தீபக் சாஹர் இந்த போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி, 48 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. லோகேஷின் ஆட்டத்தில் சென்னை அணி பஞ்சு பஞ்சாய் சிதறியது.

கடும் விமர்சனம்
எனினும், தீபக் சாஹரின் இந்த செயல், சற்று எதிர்ப்புகளையும் சந்தித்து இருக்கிறது. ஆம்! பொதுவாக கால்பந்து விளையாட்டு வீரர்கள் இதுபோன்று, போட்டியின் போது திடீரென அனைவரின் முன்பும் காதலை வெளிப்படுத்தி, தங்கள் அன்புக்கு உரியவர்களை சம்மதிக்க வைப்பார்கள். கிரிக்கெட் போட்டிகளில் எப்போதாவது ரசிகர்கள் இதுபோன்ற காதல் அல்லது கல்யாண புரபோஸ்களை செய்து பார்த்திருப்போம். ஆனால், இதுபோன்ற புரபோசல்களை பலரும் கடுமையாக எதிர்க்கின்றனர்.

ஏற்றுக் கொள்ள முடியாது
காதல் என்பது இருவர் மனதிலும் ஏற்பட வேண்டும். இவரை திருமணம் செய்தால், நம் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும் என்ற உணர்வு இருவருக்குள்ளும் ஏற்பட வேண்டும். அதன் பிறகே காதல், கல்யாணம் என்ற அடுத்தடுத்த படிகளுக்கு செல்ல வேண்டுமே தவிர, இதுபோன்று மாஸ் கிரவுடில் "சர்பிரைஸ்" செய்கிறேன் என்று, அந்த பெண்ணின் முன்பு மண்டியிட்டு தன் காதலை வெளிப்படுத்துவது என்பது, மறைமுகமாக அந்த பெண்ணை 'என்னை நீ ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்' என்று வற்புறுத்துதலுக்கு சமம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

கொலை மிரட்டல்
ஒருசிலர், தான் ஒருதலையாக விரும்பும் பெண்ணிடம், காதல் புரபோஸ் செய்த பிறகு, அவள் ஏற்காமல் போனால், தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுவார். சிலர், 'என்னை ஏற்றுக் கொள்ளாவிட்டால் உன்னையும் கொன்றுவிட்டு, நானும் இறந்து விடுவேன்' என்பார்கள். இப்போது வரை இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இதுபோன்ற மனநிலை உள்ளவர்களுக்கும், தீபக் சாஹர் போன்றோருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்கின்றனர். அவர்கள் மூர்க்கத்தனமாக சம்பந்தப்பட்ட பெண் மீது தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்கள். இவர் சாஃப்ட்டாக அந்த பெண்ணிடம் தனது விருப்பத்தை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்.

கட்டாயப்படுத்தப்படுகிறாள்
இதுபோன்று, பலர் கூடியிருக்கும் ஒரு பொது நிகழ்ச்சியில், ஒரு பெண் முன்பு மண்டியிட்டு, அவளது விரலில் மோதிரம் அணிவித்து, என்னை ஏற்றுக் கொள் என்றால், அவளால் அந்த நிமிடம் என்ன செய்ய முடியும்? அவளது மனம் எதை யோசிக்கும்? பலரும் கூடி நின்று, சம்பந்தப்பட்ட நபர் மோதிரம் போடுவதை என்கரேஜ் செய்து ஆரவாரம் செய்யும் போது, அந்த பெண்ணால் அந்த நொடி என்ன முடிவு எடுக்க முடியும்? பலரும் மகிழ்ச்சியோடு அந்த சம்பவத்தை வரவேற்கும் போது, முகத்தில் அடித்தால் போல், 'முடியாது' என்று எப்படி சொல்ல முடியும்? அங்கே அவள் நிர்பந்திக்கப்படுகிறாள், கட்டாயப்படுத்தப்படுகிறாள். தீபக் சாஹரின் இந்த செயல், கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் ஒரு மோசமான மனநிலையை விதைத்திருக்கிறது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications











