
அக்ஸர் படேல்
இந்தத் தொடரில் தற்போது வரை டெல்லி கேபிடல்ஸ் அணி அட்டகாசமான ஃபார்மில் உள்ளது. அந்த அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 10 வெற்றிகளைப் பெற்றுள்ளது. வெறும் 3 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்துள்ள டெல்லி அணி 20 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 20 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. டெல்லி அணி முதல் இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதும் கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. இதன் மூலம் டெல்லி அணி தொடர்ந்து 3ஆவது ஆண்டாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

டெல்லி அணி
டெல்லி அணி எந்தவொரு தனிப்பட்ட வீரரையும் நம்பி இருக்காமல், ஒட்டுமொத்தமாக அணியாக இருந்து விளையாடுவதாலேயே தொடர்ந்து வெற்றியைக் குவித்து வருகிறது. ஒரு சில வீரர்களை மட்டும் நம்பாமல் அனைத்து வீரர்களும் தங்கள் சிறப்பான பங்களிப்பைத் தொடர்ந்து அளித்து வருவதாலேயே, ஒருவர் சொதப்பினாலும், மற்றொருவர் சிறப்பாக ஆடி அணியைக் கரை சேர்க்கிறார்கள். டெல்லி அணி கடைசியாக விளையாடிய 2 போட்டிகளிலும் பேக் டு பேக் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.
Recommended Video

கூட்டு முயற்சி
அதிலும் கடைசி 2 போட்டிகளுமே சென்னை மற்றும் மும்பை என மிகவும் பலம் வாய்ந்த அணிகளை டெல்லி எதிர்கொண்டிருந்தது. அணியுடன் கூட்டு முயற்சியாலும், பண்ட்-டின் சிறப்பான கேப்டன்சியாலும் டெல்லி அணி தொடர் வெற்றிகளைக் குவித்தது. அதில் குறிப்பாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் படேலின் பந்து வீச்சு அட்டகாசமாக இருந்தது. இந்த 2 போட்டிகளிலும் அக்ஸர் படேல் தான் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2011ஆம் ஆண்டிற்குப் பிறகு தொடர்ந்து 2 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது பெற்ற முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இதைப் பாராட்டும் வகையில் டெல்லி அணி நிர்வாகமும் ட்வீட் செய்திருந்தது.

அட்டகாசமான ஆட்டம்
கடைசியாகச் சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அக்ஸர் படேல் 4 ஓவர்களில் வெறும் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். சென்னை அணியை 20 ஓவரில் 136 ரன்களில் கட்டுப்படுத்த இந்த சிறப்பான பந்துவீச்சு பேருதவியாக இருந்தது. கடைசி ஓவர் வரை சென்ற இந்த ஆட்டத்தில் இறுதியில் டெல்லி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் கூட 4 ஓவர்களில் வெறும் 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

உலகக் கோப்பை டி20
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், மொத்தம் 9 போட்டிகளில் விளையாடியுள்ள அக்ஸர் படேல் 14 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். டெல்லி அணியின் பேட்டிங் மிக வலுவாக உள்ளதால் இவருக்கு பேட்டிங்கில் பெரியளவு ரன்களை குவிக்கும் வாய்ப்பு அமையவில்லை. இந்த மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பை இந்திய அணியிலும் அக்ஸர் படேல் இடம் பெற்றுள்ளார். இப்படித் தொடர்ந்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தால், அக்ஸர் படேலுக்கு பிளேயிங் 11இல் முதல் போட்டியிலேயே வாய்ப்பு அளிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











