
தடுமாறிய பேட்ஸ்மேன்கள்
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா வெறும் 7 ரன்களில் ஆவேஷ் கான் ஓவரில் கேட்ச்சானார். அதன் பிறகு, மும்பை பேட்ஸ்மேன்களால் சீராக ரன்கள் அடிக்கவே முடியவில்லை. டி காக் 19 ரன்களில் அக்ஷர் படேல் ஓவரில் கேட்ச்சாக, சவுரப் திவாரி 15 ரன்களில் அக்ஷர் ஓவரில் அவுட்டானார். கடந்த போட்டிகள் போல் அல்லாமல், இந்த மேட்சில் தனது பழைய ஃபார்மை சூர்யகுமார் யாதவ் வெளிப்படுத்தினாலும், 33 ரன்களே அடிக்க முடிந்தது. அவரும் அக்ஷர் ஓவரில் கேட்ச்சாகி வெளியேறினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பொல்லார்ட் 6 ரன்களில் நோர்க்யா ஓவரில் போல்டானார். இறுதியில், பாண்ட்யா பிரதர்ஸ் களத்தில் இருந்தாலும் அவர்களால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஹர்திக் 17 ரன்களில், ஆவேஷ் கானின் ஆவேச பந்துவீச்சில் ஸ்டெம்ப்புகள் சிதற வெளியேறினார். இறுதியில், க்ருனால் பாண்ட்யா 13 ரன்கள் எடுக்க மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது மும்பை. டெல்லி தரப்பில் அக்ஷர் படேல் 4 ஓவர்கள் வீசி, 21 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்றைய நாள் அக்ஷர் படேல் நாளாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை. அதேபோல், ஆவேஷ் கானும் 4 ஓவர்கள் வீசி, 15 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

சம்பிரதாய போட்டி
இதையடுத்து, களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் 8 ரன்களில் பொல்லார்டால் ரன் அவுட் செய்யப்பட, ப்ரித்வி ஷா 6 ரன்களில் க்ருனால் பாண்ட்யா ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவன் ஸ்மித் 9 ரன்களில் கோல்டர் நைல் ஓவரில் போல்டாக, டெல்லி அணி 30 ரங்களுக்கெல்லாம் 3 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது. நேற்று (அக்.1) நடந்த கொல்கத்தா vs பஞ்சாப் ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றிப் பெற்றதால், டெல்லி நேரடியாக 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுவிட்டது. இதனால், மும்பைக்கு எதிரான இன்றைய போட்டி அவர்களை பொறுத்தவரை பிரஷர் அதிகம் இல்லாத சம்பிரதாய போட்டி தான். எனினும், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்க வேண்டும் என்பதே, அவர்களின் இலக்காகும்.

மோசமான ஷாட்
எனினும், இன்றைய போட்டியில், மும்பை ஸ்பின் கொண்டு அட்டாக் செய்யும் என்பதை அறிந்திருந்தும், டெல்லி அணி வீரர்கள் சற்று மிதப்புடன் விளையாடியது அப்பட்டமாக தெரிந்தது. உலகக் கோப்பை டி20 அணியில் இடம்பெற்றுள்ள ப்ரித்வி ஷாவின் மோசமான ஐபிஎல் ஃபார்ம் மீண்டும் தொடர் கதையாகியுள்ளது. க்ருனால் ஓவரில் அவர் மிக சாதாரணமாக தனது விக்கெட்டை இழந்தார். ஜெயந்த் யாதவ் வீசிய பந்து, அவ்வளவு பொறுமையாக வந்துக் கொண்டிருக்க, அவசர அவசரமாக ஒரு தேவையில்லாத ஷாட்டை ஆடப் போய் தனது விக்கெட்டை இழந்தார்.

இப்போ தெரியுதா!?
ஸ்டீவ் ஸ்மித், "உள்ளேன் ஐயா" ஆட்டத்தை ஆடிச் செல்ல, ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் வெற்றியை உறுதி செய்ய போராடினர். ஆனால், டெல்லி அணிக்காகவே ஜெயந்த் யாதவை வளர்த்து வரும் மும்பை அணியிடம் ஏமாந்த கேப்டன் ரிஷப் பண்ட், 22 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து சிக்ஸ் லைனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்த போதும், தனது ஆட்ட பாணியை மாற்றிக் கொள்ளாத ரிஷப், இப்போது தனது விக்கெட்டையும் இழந்துள்ளார். (இப்போ தெரியுதா.. ஏன் தோனி உருட்டி உருட்டி கடைசி வரை மேட்சை கொண்டுட்டு போறாருன்னு!!.. சிக்ஸ் அடிக்க தெரியாம உருட்டுறது அல்ல.. டீம் ஜெயிக்கணும்.. கடைசியில் அதுதான் முக்கியம்!)

யாருக்கு லாபம்?
மும்பை இந்தியன்ஸ் 11 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றிப் பெற்றிருக்கிறது. 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றிப் பெற்றால், பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளுக்கு அது பெரும் பின்னடைவாக அமையும். இந்த மூன்று அணிகளும் இப்போது டெல்லி ஜெயிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications











