
நீண்ட நெடிய உறவு
வேறு எந்த ஐபிஎல் அணிக்கும் இப்படி ஒரு கேப்டன், வீரர்கள் குழு கிடைக்கவில்லை. டோணி மட்டுமே ஒரு ஐபிஎல் அணியின் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து கேப்டனாக இருந்து வரும் பெருமை படைத்தவர். கிட்டத்தட்ட 8 வருடமாக அவர் சென்னை அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இதுவே ஒரு சாதனைதான்.

நினைச்சுக் கூட பார்க்க முடியாது
இப்படிப்பட்ட சென்னையின் சூப்பர் ராஜாவை, மும்பை இந்தியன்ஸ் அணியிலோ அல்லது டெல்லி டேர்டெவில்ஸ் அணியிலோ அல்லது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலோ நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை ரசிகர்களால். ஏன் டோணிக்கே கூட அது வித்தியாசமாகத்தான் இருக்கும்.

தேசம் முழுவதும் 2 நிறம்தான்
கடந்த 8 வருடங்களாக கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் நேசித்த வண்ணங்கள் இரண்டுதான். ஒன்று நீலம்.. இந்திய அணியின் நிறம். 2வது மஞ்சள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறம். டோணிக்காக நேசிக்கப்பட்ட வண்ணம் இது.

டோணியால் வந்த புகழ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட அதிர்ஷ்டகரமான அணி வேறு எதுவுமே இல்லை. அந்த அளவுக்கு அந்த அணி பலன் பெற டோணியின் அருமையான வழிநடத்தல், அவரது ஆட்டம் உள்ளிட்டவைதான் முக்கியக் காரணம்.

டெண்டுல்கர் எப்படியோ
எப்படி இந்திய அணிக்கு டெண்டுல்கரோ அதேபோலத்தான் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு டோணி. ஒட்டுமொத்த நாடும் சச்சினால் பலனடைந்தது என்றால் ஒட்டுமொத்த சென்னை அணியின் முக்கியப் பலமே டோணிதான் என்று கூறுகிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி ஒருவர்.

விலக வாய்ப்பில்லை
தற்போது அனைவர் முன்பும் நிற்கும் ஒரே கேள்வி டோணி என்ன செய்யப் போகிறார் என்பதுதான். ஆனால் அவர் இந்தியா சிமெண்ட்ஸை விட்டு விலக மாட்டார் என்று அடித்துச் சொல்கிறார் அணியின் அந்த முக்கிய நிர்வாகி. சென்னையைத் தவிர வேறு அணியில் டோணி இணைய வாய்ப்பில்லை என்பது அவரது கருத்தாகும்.

இந்தியா சிமெண்ட்ஸ் துணைத் தலைவர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீண்ட காலமாக சேவையாற்றி வரும் டோணியைக் கெளரவிக்க தனது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவியைக் கொடுத்து அழகு பார்த்தவர் சீனிவாசன் என்பது நினைவிருக்கலாம். எனவேதான் சென்னை அணியை விட்டு டோணி போக மாட்டார் என அவர் உறுதியாகக் கூறுகிறார்.

டோணி மட்டுமல்ல
டோணி மட்டுமல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த சுரேஷ் ரெய்னா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பிராவோ என பலரும் டோணிக்குப் பின்னால் கட்டுக்கோப்பாக நிற்பவர்கள். கிரிக்கெட்டை விட அவர்கள் டோணியை அதிகம் நேசிப்பவர்கள். எனவே டோணி போகாவிட்டால் இவர்களும் கூட வேறு அணிகளுக்குப் போக வாய்ப்பில்லை என்கிறார்கள்.

சென்னைப் பையன்
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த டோணி, இந்திய கேப்டனாக உயர்ந்து சாதனைகள் படைத்திருந்தாலும் தற்போது அவர் முழுக்க முழுக்க சென்னைப் பையனாகி விட்டார். சென்னையை விட்டு டோணி பிரிவது என்பது நிச்சயம் வாய்ப்பே இல்லாததாகும் என்று கூறும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகி, ராஞ்சிக்கு அடுத்து டோணியின் 2வது இல்லம் சென்னை.. டோணி தனது வீட்டை விட்டு வெளியேற மாட்டார் என்றும் நம்பிக்கையோடு கூறுகிறார்.
பார்க்கலாம்.. என்ன நடக்கிறது என்று.


Click it and Unblock the Notifications