மும்பை: இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்து வெளியேறுவது ஏமாற்றமளிப்பதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் வென்றதன் மூலமாக 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிக்கு பழி தீர்த்ததோடு, 4வது முறையாக உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. அதேபோல் தொடர்ச்சியாக 10 ஒருநாள் போட்டிகளிலும் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.

இந்திய போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய கோலி 117 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும் சேர்த்தனர். இதன் பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.2 ஓவர்களில் 327 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 9.2 ஓவர்களில் 57 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இதன் மூலமாக மீண்டும் ஒருமுறை நியூசிலாந்து அணியின் உலகக்கோப்பை கனவு பறிபோனது.
இந்த தோல்வி குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேசுகையில், இந்திய அணிக்கு வாழ்த்து சொல்லி கொள்கிறேன். ஏனென்றால் உலகக்கோப்பை தொடர் முழுவதும் சிறந்த கிரிக்கெட்டை ஆடியிருக்கிறார்கள். இன்றைய ஆட்டத்தின் அவர்களின் சிறந்த ஆட்டம் வெளிப்பட்டது. டாப் அணியின் மிகச்சிறந்த ஆட்டமாக இன்று அமைந்தது. அதேபோல் எங்கள் வீரர்கள் போராடியதை நினைத்து பெருமை கொள்கிறேன்.
நிச்சயம் நாக் அவுட் போட்டிகளுடன் வெளியேறுவது ஏமாற்றமளிக்கிறது. இந்திய அணியின் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் களமிறங்கி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கிட்டத்தட்ட 400 ரன்களை இலக்காக கொடுத்தார்கள். ஸ்விங் இருந்த போது அந்த இலக்கை எட்டிப்பிடிப்பது கடினமானதாகும். எங்கள் அணிக்காக களமிறங்கி சிறிது நேரம் போராடியது மகிழ்ச்சியளிக்கிறது. வான்கடே மைதானத்தில் மிகச்சிறந்த ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால் கொஞ்சம் ஒருதலைபட்சமாக இருந்தார்கள்.
எங்களின் அணியின் ரச்சின் மற்றும் மிட்செல் இருவரும் கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷல் வீரர்கள். மிகச்சிறந்த தொடராக அவர்களுக்கு அமைந்தது. பவுலர்களும் அவ்வப்போது கம்பேக் கொடுத்தனர். நிச்சயம் இந்திய அணிக்கு சவால் அளித்தோம். இதற்காக பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.