மும்பை: சூர்யகுமார் யாதவின் அதிரடியான சதம் காரணமாக மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் சேர்த்துள்ளது. சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 103* சேர்த்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 57வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து குஜராத் அணி களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை அணி சார்பாக தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - இஷான் கிஷன் கூட்டணி களமிறங்கியது. மோகித் சர்மா வீசிய 2வது ஓவரிலேயே ரோகித் சர்மா இரு பவுண்டரி, ஒரு சிக்சரை அபாரமாக ஆடி அசத்தினார்.

தொடர்ந்து ஷமி வீசிய 3வது ஓவரில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் சிக்சர்களை விளாச, அந்த ஓவரில் 17 ரன்கள் எடுக்கப்பட்டது. இருவரின் அதிரடி காரணமாக 5வது ஓவரிலேயே ரஷித் கான் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். இருப்பினும் மும்பை அணியின் அதிரடியை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் சேர்த்தது.
ஆனால் 7வது ஓவரை வீசிய ரஷித் கான் பந்துவீச்சில் ரோகித் சர்மா 29 ரன்களிலும், இஷான் கிஷன் 31 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 7 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 66 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் 3வது வீரராக சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்பட்டார். இவருக்கு இளம் வீரர் நேஹல் வதேரா கம்பெனி கொடுக்க, ரன் ரேட் குறையால் மும்பை அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
இதனிடையே மீண்டும் ரஷித் கான் சுழலில் நேஹல் வரேதா 15 ரன்களில் ஆட்டமிழக்க, இளம் வீரர் விஷ்ணு வினோத் களமிறக்கப்பட்டார். விக்கெட் வீழ்த்தப்பட்டதால் ரன் ரேட் சற்று குறைந்தது. இந்த நிலையில் 12வது ஓவரை வீசிய அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் விஷ்ணு வினோத் சிக்சரை பறக்கவிட, இன்னொரு பக்கம் சூர்யகுமார் யாதவும் சிக்சரை விளாசினார். இதன்பின்னர் ஷமி வீசிய 13வது ஓவரில் வினோத் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி அசத்தினார்.
இருவரின் அதிரடியான ஆட்டத்தால் மும்பை அணி 15 ஓவர்கள் முடிவில் 151 ரன்கள் சேர்த்தது. பின்னர் விஷ்ணு வினோத் 30 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த டிம் டேவிட் 5 ரன்களில் வெளியேறினார். இதனிடையே சூர்யகுமார் யாதவ் 32 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இந்த நிலையில் ஃபினிஷிங் பொறுப்பு சூர்யகுமார் தலையில் விழுந்தது. இதையடுத்து 18வது ஓவரை வீசிய மோகித் சர்மா 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என்று 20 ரன்களை விளாசினார்.
தொடர்ந்து 19வது ஓவரில் 17 ரன்கள் சேர்க்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் 87 ரன்களில் ஆடியதால், அவர் சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப இரு சிக்சர்களை விளாசி ஐபிஎல் தொடரில் முதல் சதத்தை விளாசினார். இறுதியில் 49 பந்துகளில் சூர்யகுமார் யாதவ் 103 ரன்கள் சேர்த்துள்ளார். 32 பந்துகளில் அரைசதம் விளாசிய அவர், அடுத்த 17 பந்துகளில் சதம் விளாசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதியாக மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிள்ற்கு 218 ரன்கள் சேர்த்துள்ளது.