2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் பும்ரா மீண்டும் அணியில் இணைந்த செய்தி நேற்று வெளியானது. ஆனால் அது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டிருந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் பயிற்சியாளர் கீரான் பொல்லார்ட் செய்த செயல் ஒன்று பும்ராவுக்கு மீண்டும் காயத்தை ஏற்படுத்தி இருக்கும் என ரசிகர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தினர்.
2024-25 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முடிவில் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் சுமார் 4 மாத காலம் ஓய்வில் இருந்தார். 2025 ஐபிஎல் தொடரில் முதல் நான்கு போட்டிகளில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடவில்லை.

இப்போதுதான் பிசிசிஐ பும்ராவுக்கு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு அனுமதி அளித்திருக்கிறது. இந்த நிலையில் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அவரை வரவேற்கும் வகையில் சுற்றி நின்று கொண்டிருந்தனர்.
அப்போது பேட்டிங் பயிற்சியாளர் கீரான் பொல்லார்ட் பும்ராவை வரவேற்பதாக கூறி "வெல்கம் முஃபாசா" என்று கூறி அவரை தூக்கினார். லயன்ஸ் கிங் என்ற திரைப்படத்தில் இளவரசனாக பிறக்கும் சிங்கத்தை இதே போல அனைவருக்கும் தூக்கிக் காட்டுவார்கள்.
அது போன்ற ஒரு விஷயத்தை தான் பொல்லார்ட் செய்தார். பும்ரா தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் இளவரசன் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அவரை தூக்கினார். ஆனால், ஏற்கனவே முதுகில் காயம் ஏற்பட்டு இப்போதுதான் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். இது போல அவரை எதிர்பாராத நேரத்தில் தூக்கினால் அதனால் ஏதேனும் காயம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதைத்தான் ரசிகர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர்.
ஏனெனில், பொல்லார்ட் செய்ததை பும்ரா எதிர்பார்க்கவில்லை. பும்ரா அதை அசௌகரியமாக உணர்ந்தார் எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் மீண்டும் பும்ராவை ஓய்வுக்கு அனுப்புவதற்கு தான் பொல்லார்ட் முயற்சி செய்கிறார் என கிண்டலாகவும் இதை சொல்லி இருந்தனர்.
இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட உள்ள நிலையில் அதில் பும்ரா விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.