
ஐபிஎல் தொடர்
அனைத்து அணிகளிலும் எந்தெந்த வீரர்கள் கலந்துக்கொள்வார்கள் என குழப்பம் நீடித்து வருகிறது. ஆனால் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் அனைத்து வீரர்களையும் மீண்டும் உறுதி செய்துள்ளது. எனவே முதல் பாதியில் இருந்த அதே உத்வேகத்தை 2வது பாதியிலும் காட்டும் முனைப்புடன் உள்ளது. அதற்கேற்றார் போல் ஐபிஎல் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அமீரகத்திற்கு சென்றுவிட்டது.

முதற்கட்ட பயிற்சி
தோனி, ரெய்னா, உத்தப்பா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அனைவரும் சென்னையில் இருந்து கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி தனி விமானம் மூலம் துபாய் சென்றடைந்தனர். அங்குள்ள தனியார் ஓட்டலில் 6 நாட்கள் குவாரண்டைனில் இருந்த அவர்கள் 2 கொரோனா பரிசோதனைகளுக்கு பிறகு தற்போது தான் தங்களது முதற்கட்ட பயிற்சிகளை தொடங்கியுள்ள்ளனர். நேற்று அவர்கள் பயிற்சி வழங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அதுமட்டுமல்லாமல் தோனி, ரெய்னா ஆகியோர் கால்பந்து விளையாடும் புகைப்படமும் வைரலானது. எனவே சிஎஸ்கே இந்த முறை அதிரடியுடன் கோப்பையை தட்டிச்செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏமாற்றம்
இந்நிலையில அதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது. சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுபவர் சுரேஷ் ரெய்னா. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் திணறினாலும், மிடில் ஆர்டரில் தோனியுடன் இணைந்து விளையாடி ரன்களை உயர்த்திக் கொடுப்பார். ஆனால் 2021ம் ஆண்டு ஐபிஎல்-ன் முதல் பாதியில் ரெய்னாவின் வேகம் பெரியளவில் இல்லை. இந்த 2வது பாதி தொடரிலாவது அதனை மாற்றிக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே கிடைத்துள்ளது.

ரசிகர்கள் கவலை
துபாயில் சுரேஷ் ரெய்னா பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டிருந்தது. அதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் அந்த புகைப்படத்தில் ரெய்னாவின் ஃபிட்னஸ் மிகவும் மோசமாக இருந்தது. உடல் எடை அதிகமாகவும், ரன் ஓடுவதற்கே சிரமப்படுபவர் போலவும் காட்சியளித்தார். அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் இனி என்ன ஆகுமோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரெய்னா உறுதி
முன்னதாக சுரேஷ் ரெய்னா, தோனிக்காக ஐபிஎல் கோப்பையை நிச்சயம் வென்று தருவேன் என்று உறுதிபட தெரிவித்திருந்தார். அதில், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அதீத நம்பிக்கையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். தோனியின் கேப்டன்சி மிகவும் அற்புதமாக உள்ளது. அவர் ஒவ்வொரு வீரரின் வெற்றிக்காகவும் பாடுபடுகிறார். அனைவருக்கும் சுதந்திரம் கொடுத்துள்ளார். எனவே அவருக்காக இந்த முறை கோப்பையை நிச்சயம் வெல்வோம் எனக்கூறியிருக்கிறார்.

புள்ளிப்பட்டியல்
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி மற்றும் 2 போட்டிகளில் தோல்வியை பெற்றுள்ளது. இதன் மூலம் மொத்தம் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் உள்ளது. குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











