சிறப்பான சாதனைகள்
இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக விளையாடிவரும் ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளை புரிந்து வருபவர். கிரிக்கெட்டின் குறுகிய வடிவங்களின் துணை கேப்டனாகவும் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை கோப்பையை வெல்லவும் இவர் காரணமாக இருந்துள்ளார்.
ராபின் உத்தப்பா புகழாரம்
இந்திய அணியை ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தாங்கி பிடித்துள்ளதாக முன்னணி வீரர்கள் பலர் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ரோகித் சர்மா பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும், கோலி சூழ்நிலைக்கு ஏற்றாற்போல தன்னுடைய ஆட்டத்தை மாற்றிக் கொள்வார் என்றும் ராபின் உத்தப்பா சமீபத்தில் புகழ்ந்துள்ளார்.
அணியை வழிநடத்துகிறது
இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்சின் கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சிக்காக பேசிய ரோகித் சர்மா, ரசிகர்களின் அன்பும் ஆர்வமுமே இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவதாக இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய அணி பல்வேறு முக்கிய போட்டிகளை வெற்றி கொள்வதற்கும் ரசிகர்களே முக்கிய காரணமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அணிக்கான விளையாட்டு
ரசிகர்களின் ஆதரவு குறித்து நமக்கு தெரியும் வரையில் நாம் இந்திய அணிக்காகத்தான் விளையாடுகிறோம் என்பதை உணர முடியாது என்றும் ரோகித் கூறியுள்ளார். கடந்த 2007ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியின் வெற்றியை அடுத்து தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ரசிகர்களின் கொண்டாட்டத்தை பார்த்ததாகவும், அப்போது தன்னுடைய கண்களையே தன்னால் நம்ப முடியவில்லை என்றும் ரோகித் மேலும் கூறினார்.