ஐந்தாவது கோப்பை வெற்றி
ஐபிஎல்லில் தன்னை சிறப்பான மனித மேலாளராக நிரூபித்துள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா. அவர் தன்னுடைய அணியை திறம்பட நிர்வகித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார். அணிக்கு 5வது முறையாக கோப்பையை பரிசளித்துள்ளார் ரோகித்.
சிறப்பான ஆளுமை
அவருடைய இந்த திறமைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். தொடரின் இடையில் காயம் ஏற்பட்டு அதன்மூலம் அவதிப்பட்டாலும் தன்னுடைய அணி வெற்றி பெறுவதில் இருந்து பின்வாங்காமல் பார்த்துக் கொண்டார் ரோகித் சர்மா. இந்த சீசனில் மட்டுமின்றி மற்ற சீசன்களிலும் மும்பை இந்தியன்ஸ் தொட்டதெல்லாம் துலங்கியது.
ரோகித் கேப்டனாக வேண்டும்
ஐபிஎல் 2020 தொடரில் 14 லீக் போட்டிகளில் 9 வெற்றிகளை பெற்று சிறப்பாக பிளே-ஆப்பிற்கு தொடர்ந்து தகுதிச்சுற்று, இறுதிப்போட்டி என அனைத்திலும் வெற்றியே அந்த அணிக்கு கிடைத்தது. இந்நிலையில் ரோகித் சர்மா சிறப்பான மனித மேலாளர் என்றும் அவர் இந்திய அணியின் டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
ரோகித்திற்கு தெரியும்
ரோகித் சர்மாவிற்கு டி20 போட்டிகளில் வெற்றி பெறுவது குறித்து முழுமையாக தெரியும் என்றும் வாகன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு கூறியுள்ளார். இதன்மூலம் கேப்டன் விராட் கோலி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் வெற்றிபெறும்
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடினால் கண்டிப்பாக கோப்பையை வெல்ல முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். நேற்றைய ஐபிஎல் 2020 இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 51 பந்துகளில் 68 ரன்களை குவித்துள்ளார்.