மும்பை: ஐபிஎல் சீசன் 11 துவங்கியுள்ளது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனின் முதல் சிக்சரை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா அடித்தார்.
ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் துவங்கியுள்ளது. மொத்தம் 8 அணிகள், 51 நாட்கள் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும், தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன.
இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பையில் மோதுகின்றன.
மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த கோலாகலமான துவக்க விழாவுக்குப் பிறகு, இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி துவங்க உள்ளது. இன்றைய போட்டியில் டோணி டாஸை வென்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலிங் செய்தது.
இந்த சீசனையும் சேர்த்து, ஒவ்வொரு சீசனின் முதல் ஆட்டத்தில் அதிக முறை விளையாடியப் பெருமையை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹர்பஜன் புரிந்துள்ளனர். இருவரும் 6வது முறையாக சீசனின் முதல் ஆட்டத்தில் பங்கேற்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி, போலர்டு, ராயுடு ஆகியோர் 5வது முறையாக முதல் ஆட்டத்தில் விளையாடுகின்றனர்.
18 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, இந்த சீசனின் முதல் சிக்சரை அடித்தார்.
இதுவரை நடந்துள்ள 10 சீசன்களில், 2012ல் அதிகபட்சமாக 732 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. அதற்கடுத்து, 2014ல் 714, 2015ல் 692, 2013ல் 674, 2011ல் 639, 2008ல் 622, 2010ல் 585, 2009ல் 506 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. இந்த சாதனை இந்த சீசனில் முறியடிக்கப்படுமா?