'40வயசு ஆச்சு,ரொம்ப திணறுறாரு.. தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் சீசன்..' பரபரப்பை கிளப்பிய பிராட் ஹாக்
டெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்தத் தொடருடன் தோனி ஓய்வு பெற வாய்ப்புகள் அதிகம் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கியது. இருப்பினும், கொரோனா 2ஆம் அலை காரணமாக மே மாதத்தில் ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
சுமார் 3 மாத இடைவெளியில் ஐக்கிய அமீரகத்தில் இப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 8 போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

தோனி பேட்டிங்
சிஎஸ்கே அணியின் நெட் ரன்ரேட் 1.069ஆக உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே பிளேஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடருடன் தல தோனி ஓய்வு பெற வாய்ப்புகள் அதிகம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே தோனியால் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. குறிப்பாகக் கடந்த இரண்டு சீசன்களாக, அவரால் பேட்டிங்கில் சிறப்பான திறனை வெளிப்படுத்த முடியவில்லை. கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய தோனி 200 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதேபோல இந்த ஆண்டு 10 ஆட்டங்களில் விளையாடிய அவர் 52 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

பிராட் ஹாக் பரபரப்பு
குறிப்பாக இந்த ஆண்டு தோனியால் பேட்டிங்கில் சோபிக்க முடியவில்லை. தோனியின் ஐபிஎல் கோரியரில் இந்த ஆண்டு தான் மோசமானதாக உள்ளதாகவும் அவருக்கு 40 வயது ஆகிவிட்டதும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் நட்சத்திர வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்றே நான் நினைக்கிறேன். குறிப்பாக அவர் கடந்த போட்டியில் வருண் சக்கரவர்த்தியிடம் அவுட் ஆனதைப் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

விக்கெட் கீப்பிங்
அவரது batக்கும் padக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்தது. அவருக்கு 40 வயது ஆகிவிட்டது. தனது பேட்டிங் திறனை தோனி இழந்து வருகிறார் என்றே நான் கருதுகிறேன். அதேநேரம் அவரது கீப்பிங் மிகச் சிறப்பாக உள்ளது. அதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. இந்திய கிரிக்கெட் அணிக்கும் சரி, சிஎஸ்கே அணிக்கும் சரி தோனியின் தலைமைப் பண்பு மிகவும் உதவும். இளம் வீரர்கள் அணியில் வளரவும் வீரர்களைத் திறனை மேம்படுத்துவதற்கும் தோனியின் பங்கு முக்கியமானது.

ஐபிஎல் மெகா ஏலம்
அவர் இருப்பது இந்திய கிரிக்கெட் அணிக்கும் சரி மற்றும் சிஎஸ்கேவுக்கும் சரி நல்லது தான். இளைஞர்கள் அவரிடம் இருந்து பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். அவர் களத்தில் எப்போதும் அமைதியாக இருப்பார். ஆனால் பேட்டிங்கை பொறுத்தவரை அவரது பாடி லாங்குவேஜை பார்த்தால் திறனை இழந்துவிட்டது போலவே தெரிகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பிறகு அவர் அணியின் பயிற்சியாளராகவோ அல்லது ஆலோசகராகவோ இருப்பார் என்றே நினைக்கிறேன். அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் மெகா ஏலத்தில் தோனி இல்லாத புதியதொரு சிஎஸ்கே அணியை உருவாக்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

ஓய்வு தான்
அவருக்கு 40 வயதாகிறது. இப்போது உலகக் கோப்பை இந்திய அணிக்கும் அவரை ஆலோசகராக நியமித்துள்ளனர். இது இளைஞர்களை அதிகம் கொண்ட இந்திய அணிக்கு பேருதவியாக இருக்கும். அடுத்து வரும் ஆண்டுகளில் தோனி அணியை பிளெமிங் உடன் சேர்ந்து ஆலோசகராக இருக்கலாம். அப்படியில்லை என்றால் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராகக் கூட அவர் ஆகலாம்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications