சென்னை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றியை பெற்றது. ரஹானே பேட்டிங், ஜடேஜா பவுலிங், தோனி ரிவ்யூ சிஸ்டம், ருதுராஜ் ஆட்டம் என்று சிஎஸ்கே ரசிகர்களுக்கு தேவையான அத்தனை அம்சங்களும் ஒரே போட்டியில் அமைந்தது. முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
சென்னை அணியின் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், சான்ட்னர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணியில் ரஹானே 27 பந்துகளில் 61 அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார். அதேபோல் இறுதிவரை களத்தில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட், 36 பந்துகளில் 40 ரன்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் சென்னை அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து அபார வெற்றியை வான்கடே மைதானத்தில் பதிவு செய்தது.

இந்த வெற்றியால் சென்னை அணி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் தொடராக இந்த தொடர் இருக்க வாய்ப்புகள் உள்ளதால், சிஎஸ்கே விளையாடும் ஒவ்வொரு போட்டியும் திருவிழாவாக மாறியுள்ளது. எந்த மைதானம், எந்த மாநிலம் என்பதை கடந்து அத்தனை மைதானங்களிலும் சென்னை அணி ரசிகர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். நேற்றைய போட்டியிலும் மும்பை வான்கடே மைதானத்திலும் தோனியின் பெயர் சொல்லி அரங்கம் அதிர உற்சாக குரல் எழுப்பினர்.

இந்த நிலையில் சென்னை அணியின் வெற்றி குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பதிவிட்டு கருத்து ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், "தல தோனி ஜெயிக்கணும்னு முடிவு பண்ணிட்டா கடவுளே வந்து தடுத்தாலும் அது தவுடிப்பிடி தான். குதியாட்டம் போடுற எதிர் டீமுக்கு முன்னாடி பேட்டைக்காளியா நின்னு சம்பவம் செஞ்சு இந்த சென்னை அணிக்கு தாயும்.. தகப்பனும்மா அவர் இருக்கும்போது.
ஐபிஎல் தொடரில் இவனை வெல்ல எவன் இங்கு" என்று பதிவிட்டுள்ளார்.