சென்னை: ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய வீரர்களை கொண்டு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் தேர்வு செய்துள்ள 11 பேர் கொண்ட அணிக்கு கேப்டனாக எம்எஸ் தோனியை தேர்வு செய்துள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி 5வது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கடைசி 2 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி அசத்தினார். இந்த வெற்றியால் எமோஷனலான தோனி, ஜடேஜாவை தூக்கி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த மகிழ்ச்சியில் இருந்து இன்னும் ரசிகர்கள் மீளமுடியாமல் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன், நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய வீரர்களை கொண்டு கனவு அணியை கட்டமைத்துள்ளார். அந்த அணியில் சென்னை அணியில் இருந்து 3 வீரர்களும், குஜராத் அணியில் இருந்து 5 வீரர்களும், மும்பை அணியில் இருந்து 2 வீரர்களும், ஆர்சிபி அணியில் இருந்து ஒரேயொரு வீரரையும் தேர்வு செய்துள்ளார்.
சென்னை அணியில் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ஆல் ரவுண்டர் ஜடேஜா, கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்துள்ளார். குஜராத் அணியில் இருந்து தொடக்க வீரர் சுப்மன் கில், வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி, மோகித் சர்மா, சுழற்பந்துவீச்சாளர்கள் ரஷித் கான் மற்றும் நூர் அஹ்மத் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். மும்பை அணியில் இருந்து சூர்யகுமார் யாதவையும், ஆல் ரவுண்டர் கேமரூன் க்ரீனையும் டிக் செய்துள்ளார். அதேபோல் ஒன் டவுன் இடத்திற்கு ஆர்சிபி அணியின் கேப்டனான டூ பிளசிஸை ஹெய்டன் தேர்வு செய்துள்ளார்.
ஹெய்டன் தேர்வு செய்த அணி: சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், டூ பிளஸிஸ், சூர்யகுமார் யாதவ், கேமரூன் க்ரீன், ஜடேஜா, எம்எஸ் தோனி, ரஷித் கான், முகமது ஷமி, நூர் அஹ்மத், மோகித் சர்மா