பெங்களூரு: பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை அணி விளையாட உள்ளது. இந்த நிலையில் மும்பை அணியில் மொத்தமாக 9 பேட்ஸ்மேன்கள், 7 ஆல் ரவுண்டர்கள், 8 பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இதனால் இம்பேக்ட் பிளேயர் விதிகளின் படி யார் களமிறங்க அதிக வாய்ப்புகள் என்பது பற்றி பார்க்கலாம்.
ஐந்து முறை சாம்பியன், கடப்பாரை பேட்டிங், கன் பவுலிங் என்று வாழ்ந்து வந்த மும்பை அணி மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை. அடுத்தடுத்து இரு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியது.

அதிலும் கடந்த ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பெறுவதற்கு பெரிய திண்டாட்டமாக போனது. இதனைப் பார்த்த சென்னை ரசிகர்களே, நல்லா வாழ்ந்தவன் கெட்டுப் போகக் கூடாது என்று டயலாக் பேசி ஆறுதல் கூறும் அளவிற்கு சென்றது.
ஐபிஎல் தொடரில் யாரும் படைக்காத சாதனைகளை படைத்து பழகிப்போன மும்பை அணி, கடந்த ஆண்டும் அப்படியொரு சாதனையை படைத்தது. ஐபிஎல் தொடரில் முதல் 8 போட்டிகளை தொடர்ந்து தோற்ற ஒரே அணி என்ற மோசமான சாதனையை மும்பை அணி படைத்தது. இதற்கு ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, டி காக், போல்ட், ராகுல் சஹர் உள்ளிட்ட வீரர்கள் மற்ற அணிகளால் ஒப்பந்தம் செய்யப்பட்டதே காரணமாக அமைந்தது. இதனை சரி செய்ய முடியாமல் தான் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் ஏலத்தில் ஹர்திக் பாண்டியாவின் இடத்திற்கு கேமரூன் கிரீன், ஓய்வை அறிவித்த பொல்லார்ட் இடத்திற்கு டிம் டேவிட், போல்ட் இடத்திற்கு ஆர்ச்சர் உள்ளிட்ட வீரர்களை மும்பை அணி கொண்டுள்ளது. கடந்த ஆண்டே ஆர்ச்சர் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், இந்த ஆண்டே மும்பை அணிக்காக களமிறங்க உள்ளார். பும்ரா மற்றும் ஆர்ச்சர் என்று இரு துருவங்கள் ஒன்றாக வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்த போதே, பும்ரா ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனால் மும்பை அணி முழுக்க வேகப்பந்துவீச்சில் ஆர்ச்சர் மற்றும் பெஹர்ன்டார்ஃப் ஆகியோரை மட்டுமே நம்பியுள்ளது. அதேபோல் 2017ஆம் ஆண்டு முதல் பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாத ரோகித் சர்மா, இடதுகை பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்துவீச்சாளர்களை கண்டாலே அச்சத்தில் உறையும் இஷான் கிஷன், ஸ்ட்ரைக் ரேட் பிரச்சனையோடு உள்ள திலக் வர்மா என்று சீரற்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் மும்பை அணி நிரம்பியுள்ளது. இப்போதைக்கு மும்பை அணிக்கு இருக்கும் ஒரே ஆறுதல் சூர்யகுமார் யாதவ், டிவால்ட் பிரெவிஸ் மட்டுமே.
ஆனால் 5 முறை சாம்பியனான மும்பை அணிக்கு கம்பேக் கொடுப்பது எப்படி என்று நன்றாக அறிந்தே இருக்கும். கம்பேக் கொடுப்பதில் தான் ஐபிஎல் தொடரின் சுவாரஸ்யமும் அடங்கி இருக்கிறது. அப்படியொரு சுவாரஸ்யத்திற்காக தான் அனைத்து அணிகளின் ரசிகர்களும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை அணி இன்று விளையாட உள்ளது. தற்போது மும்பை அணியில் உள்ள வீரர்கள் யார் யார் என்பதை பற்றி அறியலாம்.
மும்பை அணி வீரர்கள் விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), டிவால்ட் பிரெவிஸ், ராமன்தீப் சிங், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், ஷாம்ஸ் முலானி, பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ஹிருத்திக் சோக்கீன், அர்ஜூன் டெண்டுல்கர், ஜோஃப்ரா ஆர்ச்சர், அர்ஷத் கான், ஜேசன் பெஹ்ரண்டார்ஃப், சந்தீப் வாரியர், ஆகாஷ், டூவன் யான்சன், விஷ்ணு வினோத், நேஹல் வதீரா, ராகவ் கோயல்