மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து எந்த நிதியும் பெறவில்லை… சச்சின் விளக்க கடிதம்
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து எந்த நிதியும் பெறவில்லை என்று பிசிசிஐக்கு சச்சின் டெண்டுல்கர் விளக்கம் கடிதம் அனுப்பி உள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து டெண்டுல்கர் ஓய்வு பெற்ற பின், பிசிசிஐக்கு ஆலோசனை வழங்கும் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியில் இடம்பிடித்தார் மேலும் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியில் இருந்து வருகிறார்.
அந்த அணி எங்கெல்லாம் சென்று விளையாடுகிறதோ, அங்கெல்லாம் சச்சின் செல்கிறார். இதனால் அவர் ஆலோசகராக செயல்படுகிறார். அதனால் இரட்டை ஆதாயம் தரும் பதவி வகிக்கிறார் என்று மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தில் உள்ள சஞ்சீவ் குப்தா என்பவர் பிசிசிஐயின் குறைதீர் அதிகாரியிடம் புகார் கூறியிருந்தார்.

ஆதாயம் தரும் பதவி
இதையடுத்து, சச்சின், இரட்டை நிதி ஆதாயம் பெறுகின்றாரா என கேட்டு உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட டிகே ஜெயின் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதே போல் பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டியில் இருக்கும் கங்குலி, லக்ஷ்மண் ஆகியோரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சச்சின் விளக்கம்
இதற்கு சச்சின் விளக்க கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மும்பை இந்தியன்ஸ் அணியினால் எந்த ஒரு நிதிப் பயனையும் அடையவில்லை. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு அடிப்ப்படை பணியாளராகவோ, ஊழியராகவோ இல்லை.

விதிகளை மீறவில்லை
அதே போல் மும்பை இந்தியன்ஸ் அணி எடுக்கும் முடிவில் தன் தலையீடோ அல்லது ஆலோசனையோ எதுவும் இல்லை. தான் பிசிசிஐ விதிகள் மற்றும் வேறு விதிகளை மீறி எந்த ஒரு இரட்டை நிதி ஆதாயத்தையும் பெறவில்லை.

நான் தயார்
தான் கற்று அறிந்த கிரிக்கெட் நுணுக்கங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கின்றேனே தவிர மற்றபடி எந்த ஆதாயமும் இல்லை. இதுகுறித்து தன்னுடைய சட்டப் பிரதிநிதிகளுடன் விளக்கம் அளிக்க தயார் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications