அகமதாபாத்: அகமதாபாத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை சில நிமிடங்களுக்கு முன் நின்றிருந்த நிலையில், தற்போது மீண்டும் பெய்ய தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது. 2 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்ற லீக் போட்டிகளுக்கு பின், பிளே ஆப் சுற்றுக்கு குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை அணிகள் முன்னேறின. இதில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் தோல்வியடைந்த வெளியேற, இறுதிப்போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அகமதாபாத்தில் காலையில் இருந்து வெயில் அடித்து வந்த நிலையில், ஆட்டம் தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் திடீரென மழை பெய்ய தொடங்கியது. ஏற்கனவே குஜராத் - மும்பை அணிகள் ஆடிய ஆட்டத்திலும் இதேபோல் மழை குறுக்கிட்டது. ஆனால் சில நிமிடங்களில் மழை நின்றதால், ஆட்டம் சிறிது நேரம் தாமதமாக தொடங்கியது. இதனால் இன்றைய ஆட்டமும் தாமதமாக தொடங்கும் என்று பார்க்கப்பட்டது.
ஆனால் 6.30 மணியளவில் தொடங்கிய மழை, அடுத்தடுத்து தீவிரமானது. ஒரு கட்டத்தில் 2 மணி நேரத்திற்கும் அதிகமாக கனமழை பெய்து வருகிறது. 8.20 மணியளவில் மழை நின்ற நிலையில், ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். ஆனால் நிம்மதி பெருமூச்சு விடுவதற்கு மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது. 9.35 மணியளவில் முதல் பந்து வீசப்படவில்லை என்றால், ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்படும் சூழல் உருவாகும். இதனால் ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
ஒருவேளை கனமழை தொடரும் பட்சத்தில் ஆட்டம் நாளை நடக்க வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் 12.06 மணிக்கும் முதல் பந்து வீசப்பட்டால், 5 ஓவர் ஆட்டமாகவும் நடத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டி கூட சூப்பர் ஓவராக நடக்காத சூழலில், இந்த ஆட்டம் சூப்பர் ஓவர் போல் குறைந்த ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.