ரோகித்தால் மதிக்கப்படாத ஹர்திக் பாண்டியா ? சீனில் இல்லாத துணை கேப்டன்.. 10 ஓவர் வீசுவது எப்போது?
கொல்கத்தா : இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக பொறுப்பு வகிப்பது குறித்து ஹர்திக் பாண்டியா முதல்முறையாக பேட்டி அளித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா தற்போது ஒரு நாள் தொடரில் துணை கேப்டனாக செயல்படுகிறார். ஆனால் எந்த டீம் ஆலோசனையிலும் ஹர்திக் பாண்டியா இடம்பெறுவதில்லை.
டி20 அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதால் அவர் மீது ரோகித் சர்மா கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காரணம், கேப்டனும், துணை கேப்டனும் களத்தில் நின்று பேசியதை அவ்வளவாக பார்க்க முடிவதில்லை.

நிம்மதியாக இருக்கிறேன்
இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய நிலையில் ஹர்திக் பாண்டியா இருக்கிறார். இந்த நிலையில் துணை கேப்டன் பதவி குறித்து ஹர்திக் பாண்டியாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ரோகித் சர்மா அணியின் கேப்டனாக திரும்பி விட்டதால் இப்போது எனக்கு எந்த நெருக்கடியும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன்.நான் எதைப் பற்றியும் யோசிக்க தேவையில்லை.

தயாராக இருக்கிறேன்
அணியில் ஏற்கனவே என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க நிறைய வீரர்கள் இருக்கிறார்கள்.எனவே ஒரு நாள் தொடரில் என்னுடைய தனிப்பட்ட ஆட்டத்தை எப்படி சரியாக விளையாடுவது என்பது குறித்து யோசித்தாலே போதும். அதேவேளை அணியில் நடக்கும் முக்கிய விஷயங்கள் குறித்தும் தேவைப்படும் நேரத்தில் என்னுடைய ஆலோசனையை வழகுவதற்கும் நான் எப்போதுமே தயாராக தான் இருக்கிறேன். அணிக்கு தேவைப்படும்போது நான் நிச்சயமாக இருப்பேன். தொடர்ந்து கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதால் உடலில் தற்போது வரை எந்த பிரச்சனையும் இல்லை.

10 ஓவர்கள்
பணிச்சுமை குறித்து அணி நிர்வாகம் வகுத்த திட்டத்தின்படியே அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது. உலகக்கோப்பைக்கு இன்னும் ஆறு ஏழு மாதங்கள் தான் இருப்பதால் கவனத்துடன் கையாள வேண்டும். இதனால் முழு ஓவர்களை வீச அதிகம் முயற்சி எடுக்கவில்லை. அதே சமயம் என்னுடைய உடலும் பணி சுமையை ஏற்க தயாராக இருக்கிறது. எந்த தருணத்தில் எவ்வளவு பணி செய்ய வேண்டும் என்பது குறித்து மெதுவாக நான் தயாராகி வருகிறேன்.

சாதகம் என்ன?
விரைவில் 10 ஓவர்கள் வீச முயற்சி செய்வேன் என்று அவர் கூறினார். ஹர்திக் பாண்டியா தனது முழு 10 ஓவர்களையும் வீசினால் அவரை மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக வைத்துக் கொண்டு கூடுதலாக ஒரு ஆல்ரவுண்டரை பிளேயிங் லெவனில் இந்திய அணி பயன்படுத்தலாம் என்பது இந்தியாவுக்கு கூடுதல் சாதகமாக அமையும். ஹர்திக் பாண்டியா தன்னுடைய வேலையை மட்டும் பார்க்கிறேன் என்று கூறியிருப்பதன் மூலம் துணை கேப்டனாக எந்த ஆலோசனை கூட்டத்திலும் அவர் சேர்க்கப்படவில்லை என்பது போன்ற தகவல் வெளியாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications