அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிறந்த கேப்டன் என்ற பெயரை ஹர்திக் பாண்டியா வாங்கி வருகிறார். குறைந்த பட்சம் 20 போட்டிகளில் கேப்டன் பணியை செய்தவர்களில் அதிக வெற்றி விகிதத்தை பெற்றவர் பட்டியலில் ஹர்திக் பாண்டியா முதலிடத்தில் இருக்கிறார்.
தற்போது குஜராத் அணி 11 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறது. இதில் குஜராத் அணி இன்னும் ஒரு வெற்றியைப் பெற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.

இந்த நிலையில் லக்னோ அணிக்கி எதிரான வெற்றி குறித்து செய்தியாளரிடம் பேசிய ஹர்திக் பாண்டியா, இதைவிட நான் என்ன என் அணி வீரர்களிடம் கேட்க முடியும். அதுவும் ஒரு நாள் இடைவெளியில் மதிய நேரத்தில் போட்டி நடக்கிறது. இரு அணிகளும் 100 கிலோமீட்டர் வேகத்தில் பேட்டிங்கில் பயணித்துக் கொண்டிருந்தோம். ஆனால் ரஷீத் கான் பிடித்த கேட்ச் எங்களுக்காக ஆட்டத்தை தலைக்கீழ் மாற்றியது.
இதன் மூலம் ஆட்டம் எங்களது கட்டுப்பாட்டிற்குள் வந்தது. மேயர்ஸ் ஆட்டமிழந்த உடன் லக்னோ அணியின் பேட்டிங்கில் தோய்வு ஏற்பட்டது. நான் என்னுடைய சகோதரன் குர்னல் பாண்டியா மீது அதிக அன்பு வைத்திருக்கிறேன். இன்றைய ஆட்டத்தில் கூட அவர் நன்றாக செயல்பட வேண்டும். அதே சமயம் எங்கள் அணி ஜெயிக்க வேண்டும் என்று தான் நினைத்தேன்.
இன்றைய ஆட்டம் இன்னும் கொஞ்சம் நெருக்கடியாக இருந்து நாங்கள் வென்றிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். எங்கள் இருவருக்கும் யார் சிறந்தவர்கள் என்ற போட்டி எல்லாம் இல்லை. நாங்கள் இன்று எதிரெதிர் அணியின் கேப்டனாக விளையாடுவதை என் தந்தை இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியுடன் பார்த்திருப்பார். எங்கள் வீட்டு உறுப்பினர்களும் இந்த போட்டியை ஆவலுடன் பார்த்திருக்கிறார்கள். இதேபோன்று ஆட்டத்தை எஞ்சிய போட்டிகளிலும் வெளிப்படுத்துவோம் என நான் நம்புகிறேன்.