பெங்களூரு: ஐபிஎல் மினி ஏலத்தில் கோடிகளை கொட்டிக் கொடுத்து வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், கேமரூன் கிரீன் ஆகியோர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் மினி ஏலத்தில் கோடிகளை கொட்டிக் கொடுத்து வெளிநாட்டு வீரர்களை வாங்கியது.

குறிப்பாக மும்பை அணி சார்பாக கேமரூன் கிரீனுக்கு ரூ.17.5 கோடி ஏலத்தில் விலை கொடுக்கப்பட்டது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியாவின் ஆல் ரவுண்டர் இடத்தை நிரப்புவார் என்று மும்பை அணி நிர்வாகம் கருதியது.
அதேபோல் ஐதராபாத் அணி தரப்பில் ஹாரி புரூக்-க்கு ரூ.13 கோடி விலை கொடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சென்னை அணி தரப்பில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்-க்கு ரூ. 16.25 கோடி ஏலத்தில் விலை கொடுக்கப்பட்டது. இதனால் அதிக தொகை கொடுக்கப்பட்ட வீரர்கள் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
நிச்சயம் தாங்கள் சார்ந்திருக்கும் அணிகளுக்காக கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தி பெரிய வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல் காயம் காரணமாக பந்துவீசவும் இல்லை.
அதேபோல் ஐதராபாத் அணி சார்பாக ரூ.13 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கப்பட்ட ஹாரி புரூக் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் 21 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதுமட்டுமல்லாமல் இந்திய ஆடுகளங்கள் சுழலுக்கு சாதகமாக இருக்கும் சூழலில், சாஹல் பந்தில் களத்திலேயே பரதநாட்டியம் ஆடியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த நிலையில் மும்பை அணி சார்பாக ரூ. 17.50 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கப்பட்ட கேமரூன் கிரீன், ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதுமட்டுமல்லாமல் மும்பை அணியில் வழக்கமாக 3வது இடத்தில் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீனுக்காக 4வது இடத்தில் களமிறங்கினார்.
அதேபோல், கேமரூன் கிரீனுக்கு பேபி ஏபி டி வில்லியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் டிவால்ட் பிரெவிஸ் மும்பை அணியின் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார். இதனால் வெளிநாட்டு வீரர்களுக்கு பணத்தை கொட்டிக் கொடுக்கும் ஐபிஎல் அணிகள், அவர்களால் இந்திய ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட முடியுமா என்று சிந்திக்காமல் இருந்துள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.