சென்னை : ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் போட்டியில் லக்னோவும், மும்பையும் மோதின ஆட்டத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நாக் அவுட் ஆட்டத்தில் ஏதேனும், ஒரு சிறிய தவறை நடுவர் செய்தால் கூட அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இதனால் தான், ஒவ்வொரு ரன்னையும், ஒவ்வொரு பந்தையும் கண்கொத்தி பாம்பு போல் நடுவர்கள் பார்ப்பார்கள். இந்த நிலையில் மும்பை அணி பேட்டிங் செய்த போது தொழில்நுட்பத்தில் தவறு நிகழ்ந்திருப்பதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை அணியில் ரோகித் சர்மா, இஷான் கிஷன் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமாரும், கேமிரான் கிரீன் ஆகியோர் விளையாடினர். எனினும் நவீன் உல் ஹக் வீசிய ஒரே ஓவரில் இருவரது விக்கெட்டையும் கைப்பற்றினார்.இதனால் 105 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற ஸ்கோருடன் மும்பை அணி விளையாடியது.
அப்போது களத்துக்கு வந்த டிம் டேவிட்டும், திலக் வர்மாவும் பொறுமையாக விளையாடி விக்கெட் விழாமல் பார்த்து கொண்டனர். இந்த நிலையில், ஆட்டத்தின் 16.3 வது ஓவரில் யாஷ் தாக்கூர் பந்துவீசும் போது, அது கொஞ்சம் உயரமாக வந்தது போல் தெரிந்தது. இதனை அடித்த டிம் டேவிட் கேட்ச் ஆனார்.
எனினும் இந்த பந்து உயரமாக வந்தததாக டிம் டேவிட் கூற, நடுவர்களே, இது அவுட்டா இல்லையா என்று மூன்றாம் நடுவர் உதவியை நாடினர். அப்போது Ball tracking தொழில்நுட்ப உதவியுடன் பார்த்தனர். அப்போது வெறு கண்ணில் பார்க்கும் போது உயரமாக தெரிந்த பந்து, அந்த தொழில் நுட்பத்தில் பார்க்கும் போது பந்தின் உயரம் குறைவாக தான் இருந்தது போல் கிராபிக்ஸ் காட்சி அடங்கிய ரீப்ளேவில் தெரிந்தது.
இதன் அடிப்படையில் நடுவர்கள் அவுட் என்று கொடுத்தனர். ஆனால் இதனை கொஞ்சமும் நம்ப முடியாத டிம் டேவிட் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனை பார்த்த ரசிகர்களும் ஷாக் ஆனார்கள். நிச்சயம், இந்த தொழில்நட்பத்தில் தவறு இருப்பதாக பலரும் குற்றம்சாட்டி உள்ளனர். டிம் டேவிட்டின் இந்த விக்கெட் ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.