ஹைதராபாத்: ஐ.பி.எல். தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஹைதராபாத் சன்ரைசர்ஸ்.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் 10-வது சீசன் நடைபெற்று வருகிறது. முக்கிய கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டி ஹதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 45 பந்தில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சன்ரைசர்ஸ் சார்பில் கவுல் அதிகபட்சமாக 3 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இதன் பின்னர் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 140 ரன்களை குவித்து அசத்தல் வெற்றி பெற்றது. ஷிகர் தவான் ஆட்டமிழக்காமல் 62 ரன்களையும், ஹென்ரிக்ஸ் 44 ரன்களையும் குவித்தனர். ஹைதராபாத் அணிக்கு இது 7வது வெற்றியாகும். இதன் மூலம் அந்த அணியின் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. மும்பை அணி ஏற்கெனவே பிளே ஆப் சுற்றுக்க தகுதி பெற்றுவிட்டது.