மும்பை: இந்திய அணி 11 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. டி20 உலகக்கோப்பையை வென்றதன் மூலமாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது முதல் ஐசிசி கோப்பையை வென்று அசத்தியுள்ளார். கபில் தேவ், தோனி வரிசையில் ஐசிசி கோப்பை வென்ற இந்திய கேப்டன்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவும் இணைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியையும் வெல்ல வேண்டும் என்று பயணித்து வருகிறது. இந்த நிலையில் மும்பை நடந்த நிகழ்ச்சியில் பேசிய ரோஹித் சர்மா, மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றேன். அதற்கு ஒரு காரணமும் உள்ளது.

அதனால் இந்திய அணியின் வெற்றிப் பயணத்தை நிறுத்தப் போவதில்லை. ஒருமுறை வென்றியின் ருசியை கண்டுவிட்டால், உங்களால் நிறுத்தவே முடியாது. ஒரு அணியாக எங்களை நாங்களே அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்வோம். எதிர்காலத்தில் இன்னும் மிகச்சிறந்த வெற்றிகளை இந்திய அணி பெற வேண்டும்.
கிரிக்கெட்டில் வெற்றி, தோல்வி, ரன்கள் என்று எதையும் கவலைப்படாமல் ஒரு அணியாக இந்திய அணி விளையாட வேண்டும் என்று விரும்பினேன். அது டி20 உலகக்கோப்பை தொடரில் நடந்தது. அதற்கான சூழலை உருவாக்க முடிந்தது. எந்த வீரரும் உச்சக்கட்ட சுதந்திரத்துடன் விளையாட வேண்டும் என்று நினைத்திருந்தோம். அதுவும் டி20 உலகக்கோப்பையில் சிறப்பாக நடந்தது என்று தெரிவித்தார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை இந்திய அணி பங்கேற்குமா என்ற குழப்பம் ரசிகர்களிடையே உள்ளது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் இதுவரை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா என்பதை இதுவரை உறுதி செய்யவில்லை. இருந்தாலும் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல வேண்டும் என்று அனைவரும் பேசி வருகின்றனர்.
இந்திய அணி அடுத்ததாக வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளது. சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய வெல்லும் என்றாலும், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமென்றால், ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.