பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி கடைசி பந்தில் வெற்றிபெற்ற போது, அந்த அணியின் ஆவேஷ் கான் தலையில் இருந்த ஹெல்மேட்டை தூக்கி வீசி கொண்டாடிய போது நிகழ்ந்த காமெடி பற்றி தெரிய வந்துள்ளது.
ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு - லக்னோ அணிகள் மோதின. சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் செய்த தவறால் லக்னோ அணி த்ரில் வெற்றியை பெற்றது. இதையடுத்து லக்னோ அணியின் ஆவேஷ் கான் தலையில் மாட்டியிருந்த ஹெல்மேட்டை கழற்றி தூக்கி வீசி ஆவேசமாக கொண்டாடினார்.

இதற்காக ஆவேஷ் கானுக்கு அபராதமெல்லாம் விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக லக்னோ மைதானத்தில் வைத்து விராட் கோலி வேற மாதிரி சம்பவம் செய்தார். இந்த நிலையில் ஆவேஷ் கான் கொண்டாட்டத்தின் போது தூக்கி வீசி உடைந்த ஹெல்மேட் பற்றிய ரகசியம் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து லக்னோ அணி வெளிட்டுள்ள வீடியோவில் ஆவேஷ் கான் பேசியுள்ளார்.
அதில், லக்னோ அணிக்காக நான் பேட்டிங் செய்ய களமிறங்குவேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் உனாத்கட் மற்றும் மார்க் வுட் இருவரும் எதிர்பாராத வகையில் ஆட்டமிழந்தனர். அதனால் அந்த நேரத்தில் கண்ணில்பட்ட ஹெல்மேட்டை மாற்றிக் கொண்டு களமிறங்கிவிட்டேன். அதன்பின்னரே அது நிக்கோலஸ் பூரனின் ஹெல்மேட் என்று தெரிய வந்தது.
இருப்பினும் ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் வெற்றியை ருசிப்பது நன்றாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். ஹெல்மேட்டை வீசிய கொண்டாடுவதே தவறு என்று ரசிகர்கள் கொந்தளித்த நிலையில், இன்னொரு வீரரின் ஹெல்மேட்டை தூக்கி வீசி கொண்டாடியது ரசிகர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.