மான்செஸ்டர்: ஜடேஜா - ஆண்டர்சன் சண்டை தொடர்கிறது.. இந்த முறை காமெடி டிராக்கில். மான்செஸ்டரில் தொடங்கும் 4வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் டோணியிடம், ஒரு செய்தியாளர் ஆண்டர்சன்- ஜடேஜா சண்டை குறித்து கேட்க, அதற்கு டோணி நச்சென்று பதிலளித்து சிரிப்பை ஏற்படுத்தினார்.
முதல் டெஸ்ட் போட்டியின்போது நடந்த சண்டை 3வது டெஸ்ட்டுக்குப் பிறகும் கூட நீட்டி நெளித்துக் கொண்டிருக்கிறது.

இன்று இந்தியா, இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதற்கு முன்பாக மான்செஸ்டரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் டோணி. அப்போது கேட்கப்பட்ட கேள்விக்கு தனது பாணியில் நச்சென்று பதிலளித்தார் டோணி.
டோணியிடம் ஒரு செய்தியாளர், ஜடேஜா - ஆண்டர்சன் சர்ச்சை ஹேங் ஓவர் இந்தத் தொடர் முழுவதும் நீடிக்குமா என்று கேட்டார்.
அதற்கு பட்டென்று இப்படிப் பதிலளித்தார் டோணி - நான் குடிப்பதில்லை. எனவே எனக்கு ஹேங் ஓவரும் வருவதில்லை - இதைக் கேட்டதும் அங்கிருந்தவர்கள் சிரித்து விட்டனர். பின்னர் சிரிப்பை நிறுத்திக் கொண்டு சற்று சீரியஸாக பேசிய டோணி, நான் சரி என்று பட்டதைச் சொன்னேன். தவறு யார் பக்கம் என்பதை சுட்டிக் காட்ட வேண்டியதும் என் கடமை. அதைத்தான் செய்தேன். அதன் பிறகு ஐசிசியின் இஷ்டம் என்றார்.