மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததால் விராட் கோலி, புஜாரா ஆகியோரை அணியில் இருந்து நீக்குவது சரியான யோசனையல்ல என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. கடைசி நாள் ஆட்டத்தில் ஒரு செஷனை கூட முழுமையாக விளையாட முடியாமல் இந்திய அணி ஆல் அவுட்டாகியது. இதனால் இந்திய சீனியர் வீரர்களான புஜாரா, உமேஷ் யாதவ், விராட் கோலி உள்ளிட்டோருக்கு எதிராக ரசிகர்கள் கடுமையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி, புஜாரா ஆகியோர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பேட்டிங் சராசரி 30ஆக மட்டுமே உள்ளது. இவர்கள் இருவரும் சொதப்புவதால் மிடில் ஆர்டரும் பலவீனமாக மாறுகிறது. இதனால் விராட் கோலி, புஜாரா இருவருக்கும் மாற்றாக இளம் வீரர்களை கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோருக்கு பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கங்குலி பேசுகையில், ஒரு போட்டியில் தோல்வியடைந்த காரணத்தால் எதையும் முடிவு செய்ய வேண்டிய தேவையில்லை. விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோரை கடந்து நாம் செல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. ஏனென்றால் விராட் கோலியின் வயது வெறும் 34 மட்டும் தான். அதேபோல் இந்தியாவில் ஏராளமான திறமையான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.
ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாமல் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டிலும் சிறப்பான வீரர்கள் இருக்கிறார்கள். உள்ளூர் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஜெய்ஷ்வால், படிதர், அபிமன்யூ ஈஸ்வரன், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் என்று ஏராளமான வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அதேபோல் நான் பேசுவதை ஹர்திக் பாண்டியா கவனிப்பார் என்று நினைக்கிறேன். அவர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்ட்டிகளில் விளையாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். குறிப்பாக வெளிநாடுகளில் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.