லண்டன்: ஆஸ்திரேலிய அணியில் 5 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கும் போது உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலரான ரவிச்சந்திரன் அஸ்வினை ஏன் இந்திய அணியில் சேர்க்கவில்லை என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரோகித் சர்மாவின் முடிவை காட்டமாக விமர்சித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு கேப்டன் ரோகித் சர்மாவின் அணித் தேர்வும், இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பலான பேட்டிங்கும், முதல் நாளில் இந்திய பவுலர்களின் மோசமான பந்துவீச்சுமே காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக ஆஸி. அணியின் லயன் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் இந்திய அணி தரப்பில் அஸ்வின் சேர்க்கப்படவே இல்லை.

அதேபோல் ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் ஆஸ்திரேலிய அணியினர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாரான போது, இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடிவிட்டு நேரடியாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்றதும் இந்திய அணியின் தோல்விக்கு மறைமுக காரணமாக அமைந்துள்ளது. இதனால் ஐபிஎல் தொடரின் அட்டவணையையும் மாற்றக் கோரி குரல்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் காட்டமாக விமர்சித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள். ஆட்டத்தின் முதல் நாளிலேயே ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இணைந்து வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்துவிட்டனர். அதனால் முதல் இன்னிங்ஸில் மிகப்பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டிய நிலை இந்திய அணிக்குஇ ஏற்பட்டது. ஆனால் இந்திய அணியால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியவில்லை.
இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு சில நல்ல தருணங்கள் அமைந்தது. ஆனால் இந்திய அணியில் உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலரான ரவிச்சந்திரன் அஸ்வினை சேர்க்காதது ஏன் என்பது தான் எனக்கு புரியவில்லை. ஏற்கனவே சொல்லியது போல், திறமை வாய்ந்த ஸ்பின்னர்களுக்கு ஆடுகளம் சாதகமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்களால் காற்றையும், பவுன்ஸையும் பயன்படுத்தி பந்தில் மாயங்களை நிகழ்த்த முடியும். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணியின் டாப் 8 வரிசையில், 5 பேர் இடது கை பேட்ஸ்மேன்கள் என்பதையும் மறக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.