மும்பை: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற பின் ஹெல்மட்டை கழற்றி வீசி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தவறு என்று லக்னோ அணி வீரர் ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு - லக்னோ அணிகள் மோதின. சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் செய்த தவறால் லக்னோ அணி த்ரில் வெற்றியை பெற்றது. இதையடுத்து லக்னோ அணியின் ஆவேஷ் கான் தலையில் மாட்டியிருந்த ஹெல்மட்டை கழற்றி தூக்கி வீசி ஆவேசமாக கொண்டாடினார்.

இதற்காக ஆவேஷ் கானுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் போது ஆவேஷ் கான் தூக்கி வீசி உடைந்த ஹெல்மட் நிக்கோலஸ் பூரனின் ஹெல்மட் என்று தெரிய வந்தது. இதையடுத்து ஆவேஷ் கானின் செயல்கள் ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து ஆவேஷ் கான் மனம் திறந்துள்ளார்.
ஆவேஷ் கான் பேசுகையில், அந்த சம்பவத்திற்கு பின் சமூக வலைதளங்களில் எனக்கு ரசிகர்களிடம் இருந்து ஏராளமான மெசேஜ்கள் குவிந்தன. பலராலும் கிண்டல் செய்யப்பட்டேன். அதன்பின்னரே நான் ஹெல்மட்டை வீசி கொண்டாடியிருக்க கூடாது என்று எண்ணினேன். வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் உணர்வுப்பூர்வமாக இருந்த போது, அதனை செய்துள்ளேன். அதன்பின்னரே தவறை உணர்ந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஐபிஎல் செயல்பாடுகள் பற்றி ஆவேஷ் கான் பேசுகையில், கடந்த இரு சீசன்களோடு ஒப்பிடுகையில் இந்த சீசன் சிறப்பாக அமைந்தது என்றே சொல்வேன். இருப்பினும் எனது தரத்திற்கு இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். எனது எகனாமி ரேட் 10க்கு கீழ் உள்ளது. அதுமட்டுமட்டுமல்லாமல் பவர்பிளேவில் 4 அல்லது 5வது ஓவரை வீசுவேன். அதேபோல் டெத் ஓவர்களில் பந்துவீச அழைக்கப்படுவேன்.
இந்திய அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அது தேர்வுக் குழு கைகளில் தான் இருக்கிறது. கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள் வழக்கமானது தான். ஐபிஎல் தொடரில் செய்த தவறுகளை வீடியோக்கள் மூலமாக பார்த்து அதற்கேற்றவாறு பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இந்திய அணிக்காக மீண்டும் களமிறங்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.