சென்னை: இந்தியா அணிக்கு இடையிலான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி செய்த தவறுகள் என்ன என்பதை ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் வெளிப்படையாக பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணியின் ஸ்பின்னர்கள் மூவரும் போட்டி போட்டு விக்கெட்டுகளை அள்ளினர்.

ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் அள்ளினார். பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. ஆனால் களத்தில் இருந்த விராட் கோலி - கேஎல் ராகுல் இருவரும் எந்த பதற்றமும் இல்லாமல் சிறப்பாக இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். சிறப்பாக ஆடிய ராகுல் 97 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.
சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்ட பிட்ச், பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவருக்கும் சம வாய்ப்பை வழங்கியது. இப்படியான விக்கெட்டுகளை உலகக்கோப்பை தொடரில் அமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், டாஸ் வென்ற பின் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது ஆச்சரியமான முடிவாக இருந்தது. நிச்சயம் ஆஸ்திரேலிய அணியை 199 ரன்களில் இந்திய பவுலர்கள் சுருட்டியதை ஆதிக்கம் என்றே சொல்லலாம். சிறப்பாக இருந்தது. அதேபோல் ஆஸ்திரேலிய அணியும் மிகச்சிறப்பாக பவுலிங்கை தொடங்கியது.
ஆனால் இடதுகை ஸ்பின்னர் அணியில் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் பார்ட்னர்ஷிப்பும் ஆட்டத்தை இந்திய அணி பக்கம் திருப்பியது. போதுமான நேரத்தை எடுத்துக் கொண்டு மிகச்சிறந்த ஷாட்களை ஆடினார்கள். ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் ரன்கள் சேர்ப்பதற்கு உதவியாக பந்து சரியாக பேட்டிற்கு வந்தது என்று தெரிவித்துள்ளார்.