மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமான போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்துள்ளார்.
அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகம் செய்யப்பட்டார். சில போட்டிகளில் சிறப்பாக ஆடிய அர்ஜுன் டெண்டுல்கர், அதன்பின்னர் மீண்டும் பெஞ்ச் செய்யப்பட்டார். இருப்பினும் அர்ஜுன் டெண்டுல்கரின் துல்லியமான பந்துவீச்சை பலரும் பாராட்டினர். அவர் வேகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று பல திசைகளிலும் இருந்து விமர்சனங்களும் வந்தன.

அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமான முதல் போட்டியில் முதல் ஓவரை வீசிய போது, அனைத்து கேமராக்களும் சச்சின் டெண்டுல்கர் முகத்தையே தேடின. ஆனால் சச்சின் டெண்டுல்கர் உடனடியாக ஓய்வறைக்கு சென்றுவிட்டார். இதனால் அர்ஜுன் டெண்டுல்கரின் அக்காவான சாரா டெண்டுல்கர் பக்கம் கேமராக்கள் திரும்பின. இதனால் சச்சின் டெண்டுல்கர் ஏன் தனது மகன் முதல்முறையாக ஐபிஎல் தொடரில் பந்துவீசுவதை நேரடியாக பார்க்க விரும்பவில்லை என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது.
அந்த கேள்விக்கு சச்சின் டெண்டுல்கர் பதில் அளித்துள்ளார். "சிண்டிலேட்டிங் சச்சின்" என்ற எழுதப்பட்ட புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சச்சின், நான் சிறுவனாக இருக்கும் போது எனது பேட்டிங்கை பார்ப்பதற்காக உறவினர்கள் பலரும் நேரில் வருவார்கள். அதனால் அதிக கவனத்துடன் செயல்படுவேன். அது என் ஆட்டத்தை பாதிப்பதோடு, என் மீதான அழுத்தத்தையும் அதிகரிக்கும். அதனால் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜுன் அறிமுகமான போது, நான் அனுபவித்த அழுத்தத்தை என் மகன் அர்ஜுன் அனுபவிக்க விரும்பவில்லை.
நான் மும்பை அணியின் சக வீரர்களுடன் அமர்ந்திருந்தால், என் முகம் மைதானத்தின் பெரிய ஸ்கிரீனில் காட்டப்பட்டிருக்கும். நான் கவனிக்கிறேன் என்பதே என் மகனுக்கு அழுத்தத்தை கொடுத்திருக்கும். அதனால் நான் உடனடியாக ஓய்வறைக்கு சென்றுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். அதேபோல், நான் கிரிக்கெட்டை தேர்வு செய்த போது என் குடும்பம் அனைத்து உதவிகளையும் செய்தது. எனக்கான சுதந்திரத்தை கொடுத்தார்கள். அதேபோன்ற ஒரு சூழலை நான் என் மகன் அர்ஜுனுக்கு கொடுக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.