மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது குறித்து இந்திய அணியின் சுப்மன் கில் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலமாக இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியதோடு, 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றிக்காக போராடிய போது, தனியாளாக முகமது ஷமி ஆட்டத்தை இந்திய அணி பக்கம் திருப்பினார். அதுமட்டுமல்லாமல் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

அதேபோல் பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சதம் அடிக்க, சுப்மன் கில் சதமடிக்கும் வாய்ப்பை ரிட்டையர்ட் ஹர்ட்டானதால் தவறவிட்டார். இதுகுறித்து சுப்மன் கில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஒவ்வொரு முறையும் விராட் கோலி களமிறங்கும் போதும் ஏதாவது ஒன்றை ஸ்பெஷலாக நிகழ்த்தி வருகிறார். அதுவும் 10 முதல் 15 ஆண்டுகளாக தொடர்ச்சியாக விராட் கோலி சிறப்பாக ஆடி சாதனைகள் படைப்பது எங்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது.
அவரின் திறமையை காட்டிலும், ரன்கள் சேர்க்க வேண்டும் என்று காட்டுப்பசியுடன் விராட் கோலி இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. அதேபோல் இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஓர் ஆண்டுக்கும் மேலாக இணைந்து விளையாடி வருகிறோம். அதனால் எங்களின் பணி என்ன என்பது அனைவருக்கும் தெளிவாக தெரியும். அதேபோல் இந்திய அணியின் பவுலிங் அட்டாக் செய்வதை பாராட்ட வார்த்தைகளே கிடையாது. இரண்டாவதாக பவுலிங் செய்தால் எளிதாக டிஃபெண்ட் செய்கிறார்கள், முதலில் பவுலிங் ஆடினால் சராசரிக்கும் குறைந்த ஸ்கோரை நிர்ணயிக்க வைக்கிறார்கள்.
அதேபோல் கேப்டன் ரோகித் சர்மாவுடன் பேட்டிங் செய்யும் போது நாம் எந்த அழுத்தத்திலும் இருக்க தேவையில்லை. எதிர்முனையில் அவருக்கு உதவியாக நின்றாலே போதும் என்று நினைக்கிறேன். பவுண்டரி, சிக்ஸ் அடிப்பதை அவரே பார்த்து கொள்வார். அதுமட்டுமல்லாமல் நான் சதம் அடித்தேனா இல்லையா என்பது முக்கியம் கிடையாது. இந்திய அணிக்கு தேவையான இலக்கு அடிக்கப்பட்டதா என்பதே முக்கியம். மேலும் பிட்ச் மாறியதாக சர்ச்சை எழுந்ததே நீங்கள் சொல்லித்தான் தெரியும் என்று கூறியுள்ளார்.