மும்பை: ஒருநாள் கிரிக்கெட்டில் ஐசிசி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் சீனியர் வீரரான ரோகித் சர்மா முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் இதுவரை ஒருநாள் கிரிக்கெட் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ள 5 இந்திய பேட்ஸ்மேன்கள் யார் என்பதை பார்க்கலாம்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரரான ரோகித் சர்மா ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 202 ரன்களை விளாசினார். இதன் காரணமாக தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார். 38 வயதாகும் ரோகித் சர்மா மீது ஃபிட்னஸ் பிரச்சனை, ஃபார்ம் பிரச்சனை என்று ஏராளமான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.

ஆனால் அந்த அத்தனை விமர்சனங்களுக்கும் தனது ஆட்டத்தால் பதிலடி கொடுத்துள்ளார். இதனால் 2027 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா விளையாட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 38 வயதில் இந்திய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
இதனால் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ரோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் எந்தவொரு கிரிக்கெட் வடிவத்திலும் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்தது இல்லை. இந்த நிலையில் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்து புதிய பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
இதுவரை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 5 பேட்ஸ்மேன்கள் நம்பர் 1 இடத்தை ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பிடித்துள்ளனர். அதன்படி 1996ஆம் ஆண்டு சச்சின் டெண்டுலர் ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். அதன்பின் பல்வேறு முறைகள் சச்சின் முதலிடத்தை பிடித்து அசத்தி இருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கருக்கு பின் நம்பர் 1 பேட்ஸ்மேன் அந்தஸ்தை பெற்ற வீரர் என்றா அது தோனி தான். இந்திய அணியில் அறிமுகமான 2 ஆண்டுகளிலேயே தோனி அந்த சாதனையை படைத்தார். அதன்பின் 2008 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளிலும் நம்பர் 1 இடத்தை தோனி பிடித்தார். 40 போட்டிகளில் ஆடிய போது நம்பர் 1 இடத்தை பிடித்த முதல் வீரரும் தோனி தான்.
அதேபோல் விராட் கோலி 2013ஆம் ஆண்டு முதல்முறையாக நம்பர் 1 வீரராக உருவாகினார். அதுமட்டுமல்லாமல் 2017 முதல் 2021 வரை 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நம்பர் 1 பேட்ஸ்மேனாக விராட் கோலி வலம் வந்தார். 2018ஆம் ஆண்டு ஐசிசி தரவரிசையில் 909 புள்ளிகளை பெற்று சாதனையையும் படைத்தார். இதன்பின் அண்மையில் சுப்மன் கில் நம்பர் 1 இடத்தை பிடித்தார். ஆனால் அது நீண்ட நாட்கள் நிலைக்கவில்ல. தற்போது அந்த இடத்திற்கு ரோகித் சர்மா வந்துள்ளார்.