மும்பை: நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களை டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று நட்சத்திர வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் முகமது ஷமி. அதேபோல் உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையையும் படைத்தார். உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் முகமது ஷமி, அடுத்து எந்த தொடரில் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இதனிடையே உலகக்கோப்பை தொடரின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முகமது ஷமி ஓய்வில் உள்ளார். உலகக்கோப்பை தொடரின் போதே ஒவ்வொரு நாளும் ஊசி போட்டுக் கொண்டே விளையாடிய அவர், அதன்பின் சிகிச்சை எடுத்து வருகிறார். இதன் காரணமாகவே தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் , இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் முகமது ஷமி உடல்நிலையை பொறுத்து தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி பற்றிய விவாதம் தொடங்கியுள்ளது. ஏனென்றால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி, ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் காம்பினேஷன் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட இந்திய அனுபவ வீரர் முகமது ஷமி விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முகமது ஷமி பேசுகையில், இன்னும் சில மாதங்களில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. அதனால் டி20 உலகக்கோப்பைக்கு தயாராக இன்னும் நேரம் உள்ளது என்றே கருதுகிறேன். நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களை டி20 உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். அதேபோல் சரியான காம்பினேஷனுடன் அணியை கட்டமைக்க வேண்டும்.
ஒருவேளை நான் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருந்தால் என்னை தேர்வு செய்யுங்கள். யாருக்கு தான் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட விருப்பம் இருக்காது என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்திய அணியில் பும்ரா, சிராஜ் ஆகியோரின் இடங்கள் உறுதியாகியுள்ள நிலையில், மற்றொரு பவுலராக அர்ஷ்தீப் சிங்கும் கிட்டத்தட்ட இடத்தை உறுதி செய்துள்ளார். இதனால் இனி முகமது ஷமி டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.