மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இதன் மூலம் பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது. இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும்.
ஒருவேளை அந்த போட்டி டிராவில் முடிவடைந்தால், ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றி விடும். இந்த நிலையில் இந்தப் போட்டி சமனில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி வீரர்கள் கடைசி செஷனில் மட்டும் ஏழு விக்கெட் இழந்து ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியை புத்தாண்டு பரிசாக வழங்கி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி பெற்றதற்கான காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். நாம் ஏற்கனவே சொன்னது போல் ஆஸ்திரேலியா அணியை முதலில் இந்தியா 350 ரன்கள் சுருட்டி இருக்க வேண்டும். ஆனால் இந்திய அணியில் பும்ராவை தவிர முதல் இன்னிங்ஸில் எந்த வீரரும் பந்து வீச்சும் எடுபடவில்லை.
குறிப்பாக ஸ்மித் 140 ரன்கள் குவித்து ஆட்டத்தை இந்தியாவிடம் இருந்து கவர்ந்து சென்றுவிட்டார். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்து விட்டது. இதனை அடுத்து இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் தடுமாறியது. குறிப்பாக ரோகித் சர்மா மூன்று ரன்களில் ஆட்டம் இழந்தது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
தொடக்க வீரராக களம் இறங்கிய கேஎல் ராகுல் இந்த போட்டியில் மூன்றாவது வீரராக களம் இறக்கப்பட்டார். இப்படி பேட்டிங் வரிசையில் அடிக்கடி கேஎல் ராகுலை மாற்றி மாற்றி விளையாடினால் அவர் எப்படி ரன் சேர்ப்பார். இதனால் இந்த போட்டியில் கே எல் ராகுல் முதல் இன்னிங்சில் 24 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட்டும் ஆனார்.
இது இந்திய அணியின் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது. இதேபோன்று ரிஷப் பண்ட், ஜடேஜா நிலைத்து நின்று ஆட தவறி விட்டார்கள். இருவரும் தலா 50 ரன்கள் அடித்திருந்தால் கூட இந்திய அணி முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் அருகே வரை வந்திருக்கும். இதே போன்று, முதல் இன்னிங்ஸ் செய்த தவறை இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சில் இந்திய பவுலர்கள் சரி செய்தார்கள்.
ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 91 ரன்கள் சேர்ப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் அதன் பிறகு வந்த பேட் கம்மின்ஸ், நாதன் லயன் போன்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். கடைசி நான்கு விக்கெட்டுகளை எடுக்க இந்திய அணி தடுமாறியது. குறிப்பாக இந்திய அணி பேட்டிங் செய்யும்போது ஆஸ்திரேலிய கேப்டன் பேட்ஸ்மேன்களை சுற்றி பில்டர்களை நிறுத்தி வைத்து கடும் நெருக்கடியை ஏற்படுத்தினார்.
ஆனால் அப்படி ஒரு பில்டிங் செட்டப்பை இந்தியா செய்யவே இல்லை. மேலும் ஷார்ட் பால்களை ஆஸ்திரேலியாவின் கீழ் வரிசை வீரர்களுக்கு இந்திய வீரர்கள் வீசவில்லை.இது மிகப்பெரிய தவறாக பார்க்கப்பட்டது. எனினும் பும்ரா என்ற தனிமனிதனின் போராட்டத்தால் இந்திய அணி இந்த போட்டியில் டிரா செய்யும் அளவுக்கு வந்திருந்தது.
ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் 90 ஓவர் கூட விளையாட முடியாத அளவுக்கு இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமே ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் மோசமான ஆட்டம் தான். ஆஸ்திரேலிய வீரர் போலந்து கூட 74 பந்துகளை எதிர் கொண்டார். நாதன்யான் 55 பந்துகளை எதிர்கொண்டார். கம்மின்ஸ் 90 பந்துகளை எதிர் கொண்டார்.
ஆனால் விராட் கோலி 29 பந்துகளையும்,ரோகித் சர்மா 40 பந்துகளையும் தான் எதிர்கொண்டார்கள். போட்டியை சமன் செய்ய வேண்டும் என்றால் டாப் ஆர்டரில் உள்ள இரண்டு பேட்ஸ்மேன்கள் குறைந்தபட்சம் 100 பந்துகள் ஆவது எதிர் கொண்டிருக்க வேண்டும். அதிலும் இந்தியா கோட்டை விட்டுவிட்டது.ரிஷப் பண்ட் பொறுப்பான ஆட்டத்தை விளையாடி வந்த நிலையில், தேனீர் இடைவெளிக்கு பிறகு அவர் அடித்த தேவையில்லாத ஒரு ஷாட் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டது.
இதன் காரணமாக தேநீர் இடைவெளிக்கு பிறகு மூன்றாவது ஸ்சேனில் இந்தியா கொத்தாக விக்கெட்டுகளை இழந்தது. இதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இப்படி டிரா ஆக வேண்டிய போட்டியில் தோல்வியை தழுவியதற்கு தனி திறமை வேண்டும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா செல்வதற்கு அருகதையே இல்லை என்பது இந்த போட்டி வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.